Wednesday, November 1, 2017


'ஒரு நகரம் ஒரே டிக்கெட்': ரயில், பேருந்து எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு டிக்கெட்டா? 

By DIN  |   Published on : 31st October 2017 03:11 PM  | 
ticket_counter


மும்பை: ஒரு நகரம், ஒரு டிக்கெட் என்ற திட்டம், இந்தியாவில் முதல் முறையாக மும்பை மாநகரில் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், அலுவலகத்துக்கோ அல்லது பிற பயணங்களின் போதோ, ஒவ்வொரு போக்குவரத்து சேவைக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்காமல், ரயில் மற்றும் பேருந்துக்கு அல்லது பேருந்து மற்றும் டாக்ஸிக்கு ஒரே ஒரு ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால் போதும் என்கிறார்கள் அதிகாரிகள்.
ரயிலில் போக ஸ்டேஷனில் டிக்கெட் எடுத்தாலே குளறுபடி செய்கிறார்களே இது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்களுக்காக இதோ முழு விவரம்..
பல்வேறு கட்டப் பணிகள் முடிந்து ஒரு வழியாக மும்பை மாநகரம், அனைத்து விதமான போக்குவரத்துக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட டிக்கெட் வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து மும்பை மாநகர  மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் கூறுகையில், மும்பைக்கான சிறப்பு திட்டம் டிசம்பர் மாதத்தில் தொடங்கும் என்றனர்.
மும்பை மாநகர் பகுதிக்கான திட்டத்தை வடிவமைக்கும் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பல்வேறு நாடுகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒரே டிக்கெட் முறையை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து, மும்பைக்கான திட்டத்தைக் கொண்டு வருகிறது.
இந்த திட்டத்தில், புறநகர் ரயில் சேவை, பிரிஹன் மும்பை எலக்ட்ரிக் சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்ட்-ன்(BEST) பேருந்து சேவை,செம்புர் - வடாலா - ஜேகோப் சர்கிள் மோனோ ரயில் சேவை ஆகியவை இணைக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயணிகள் ஸ்மார்ட் கார்டு வசதியுடன் அனைத்து போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த திட்டத்தின் படி, அனைத்து மெட்ரோ சேவையையும் முதலில் ஒன்றிணைக்கப் போகிறோம். இந்த சேவையில் ஏற்கனவே தானியங்கி கதவுகள் இருப்பது திட்டத்தை செயல்படுத்த வசதியாகியுள்ளது.
அனைத்து மெட்ரோ சேவைகளையும் ஒன்றிணைத்த பிறகு, அதனுடன் பேருந்து சேவை இணைக்கப்படும். அதற்காக தற்போது பேருந்து டிக்கெட் முறையில் புதிய தொழில்நுட்பத்தை மாற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகுதான் ரயில் சேவையை இணைக்க முடியும். ஏன் என்றால் அதிகப்படியான உள்கட்டமைப்புகளை இதற்காக மாற்ற வேண்டும். தானியங்கி கதவு கொண்ட ரயில் நிலையங்கள், ரயில்களைக் கொண்டு வருவது போன்றவை இந்த திட்டத்தின் இறுதி கட்டத்தில் செய்து முடிக்கப்படும்.
டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டனில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

news today 23.10.1024