Sunday, December 17, 2017

சனிதோஷ நிவர்த்தி தரும் அனுமன் ஜயந்தி வழிபாடு! 
 மு.ஹரி காமராஜ்

‘அஞ்சனை மைந்தா போற்றி அஞ்சினை வென்றாய் போற்றி

வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி

மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி

எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென விருப்பாய் போற்றி'

என்று அஞ்சனை மைந்தனின் அருங்குணங்களை வியந்து போற்றுகிறார் கம்பர்.

அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவனும்; ஐம்புலன்களை வென்றவனும், சூரியதேவனிடம் வேதங்களின் பொருள் உணர்ந்தவனும், ராமபிரானின் மலரடிகளை மறவாத மனம் கொண்டவனும், நித்திய சிரஞ்சீவியாகத் திகழ்பவர் என்று அனுமனைப் போற்றுகிறார் கம்பர்.



நித்திய சிரஞ்சீவியாகத் திகழும் அனுமன் இன்றும் நம்மோடு சூட்சும வடிவில் இருக்கும் தெய்வம். மனமுருகிப் பிரார்த்திப்பவர்க்கு பிரத்யட்சமாகத் தோன்றி அருள்புரியும் தெய்வம். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் தோன்றுபவர்.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். அன்றைய தினம் அனுமன் ஜயந்தி அனைத்துக் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும்.

‘அறிவு, ஆற்றல், இசை ஞானம், உடல் வலிமை, துணிவு, புகழ், அடக்கம், ஆரோக்கியம், சொல்லாற்றல்' என்று அனைத்துக்குமே எடுத்துக்காட்டாக விளங்குபவர் அனுமன் என்று கம்பர் கூறுகிறார்.

அனுமனின் வரலாறு...

திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். 'சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார்.

ஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள். மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள். திருமணம் முடிந்தும் அஞ்சனைக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கடமலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனைக் குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனைப் பெறுவாய்’ என்று ஆசி கூறினாள்.



தர்மதேவதை கூறியவாறே திருமலைக்குச் சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.

ஈசனின் அம்சமாகப் பிறந்த அனுமன், எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கி ராமாயணக் காவியத்தில் ஒரு சிறந்த படைத்தளபதியாக விளங்கினார். ஸ்ரீராமரின் குலத்தையே காத்த கடமை வீரராக விளங்கினார். எண்ணிய காரியங்களை வெற்றியாக மாற்றும் ஆற்றல் மிக்க தீரனாக விளங்கினார். இதனால் சகல கடவுளர்களின் ஆசியோடும், வரத்தோடும் நித்ய சிரஞ்சீவி பட்டமும் பெற்றார். எவர் ஸ்ரீராமரையோ, ஆஞ்சநேயரையோ மனமுருகி வேண்டினாலும் அவர்களைக் காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றார். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் விரதம் இருப்பது சிறப்பானது. எல்லா நாள்களை விடவும் அனுமன் ஜனித்த இந்த அனுமன் ஜயந்தியில் அவரை வேண்டி விரதம் இருப்பது சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.

அனுமன் ஜயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரண்டு நாள்களில் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. சனிபகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சநேயரை அனுமன் ஜயந்தி நாளில் வணங்கினால் சனிதோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர், எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறலாம்.



‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி, தந்தோ

ஹனுமன் ப்ரசோதயாத்’

என்ற இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...