Tuesday, February 20, 2018

தாம்பரம் - செங்கோட்டை அந்யோதயா ரயில் எப்போது?

Added : பிப் 19, 2018 22:56



தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை, மார்ச் இரண்டாவது வாரத்தில் இயக்க, ஏற்பாடு நடந்து வருகிறது. தெற்கு ரயில்வேயின், புதிய ரயில் கால அட்டவணை, 2017 நவம்பர், 1ல், வெளியிடப்பட்டது. அப்போது, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் திருநெல்வேலிக்கு, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், 'சென்னை - மதுரை இடையேயான, இரண்டாவது ரயில் பாதை பணி முழுமையாக முடியும் வரை, அதிகமான ரயில்களை இயக்குவது சிரமம்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், சென்னை - மதுரை, இரண்டாவது ரயில் பாதையில், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையேயான பாதைப்பணி நிறைவடைந்தது. இப்பாதையில், பிப்., 13ல், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், விரைவு ரயிலை இயக்கி சோதனை நடத்தினார். முறையான ஒப்புதல் பெற்று, மார்ச் இரண்டாவது வாரத்தில், பயணியர் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதனால், சென்னை - மதுரை இடையேயான, இரண்டாவது ரயில் பாதை வழியாக, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு, அந்யோதயா ரயிலை இயக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த ரயிலுக்கான பெட்டிகள், சென்னை, ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்டு, தாம்பரம் ரயில்வே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, காலை, 7:00 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மதுரை வழியாக, இரவு, 10:30க்கு செங்கோட்டை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00க்கு புறப்பட்டு, இரவு, 10:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரம் - செங்கோட்டையை தொடர்ந்து, தாம்பரம் - திருநெல்வேலி இடையேயும், அந்யோதயா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களின் இயக்கம் குறித்த, முறையான அறிவிப்பை, தெற்கு ரயில்வே விரைவில் வெளியிடும்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 14.05..2026