Thursday, January 1, 2015

விமான விபத்துக்களுக்கு மோசமான காலநிலை காரணமா?

மோசமான காலநிலையும் விமான விபத்தும்
விமான விபத்துக்களுக்கு மோசமான காலநிலை முழுமையான காரணமாக அமைய முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அனுமதி கேட்டிருந்தது.


தனது பாதையில் இருந்து இன்னமும் உயரமாக பறப்பதற்கு அந்த விமானத்தின் ஓட்டுனர் அனுமதி கோரியிருந்தார்.

உலகெங்கும் நடந்த விமான விபத்துக்களை பொறுத்தவரை, அனைத்து சிறிய மற்றும் பாரதூரமான விபத்துக்களுக்கு 23 வீத காரணமாக மோசமான காலநிலை இருந்திருப்பதாக பெடரல் ஏவியேசன் நிர்வாகத்தை சேர்ந்த குளோரியா குலெசா கூறுகிறார்.

கடுமையான காற்று இருந்த இடங்களுக்கு அருகில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானால், அதில் மோசமான காலநிலையில் பங்கு என்னவாக இருந்தது என்ற ஆய்வும் அங்கு நடக்கும்.

ஜூலையில் ஏர் அல்ஜீரியா விமானம் சஹாராவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி 118 பேர் பலியான சம்பவத்தின் போது, விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று இன்னமும் தெளிவாக கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், அங்கு மோசமான காலநிலை குறித்தும் ஆராயப்படுகின்றது.



ஆனால், வெறுமனே மோசமான காலநிலை மாத்திரமே ஒரு விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதற்கு வாய்ப்பு மிகவும் அரிது என்று விமானத்துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அப்படியான தருணங்களில் அந்த விமானம் எதிர்கொள்ளும் சம்பவங்களுக்கு பின்னர் அதனை அதன் விமானியும், சிப்பந்திகளும் எப்படி செலுத்துகிறார்கள் என்பதில்தான் அது மோசமான விபத்தை எதிர்கொள்கிறதா இல்லையா என்பது தங்கியிருப்பதாக, சிறிய ரக விமானங்களின் ஓட்டுனரும், ‘’விமான விபத்து ஏன் ஏற்படுகிறது?’’ என்ற புத்தகத்தை எழுதியவருமான சில்வியா ரிங்கிலி கூறுகிறார்.

ஒரு விபத்துக்கு மோசமான காலநிலை முழுமையான காரணமாக இருக்கமுடியாது என்று கூறும் அவர், ஆனால், ஒரு மோசமான விபத்து ஏற்படுவதற்கான சூழ்நிலையை காலநிலை ஏற்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்.



ஒரு கடுமையான புயல் காற்று ஒரு சிறிய விமானத்தின் இறக்கைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம், ஆனால், விமானியும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும், அது ஏற்படாமல் தடுக்க முயல முடியும் என்கிறார் அவர். அப்படியான மிகவும் மோசமான சூழ்நிலையில்கூட விமான சிப்பந்திகள் விமானத்தை குறைந்தபட்சம் 10 கிலோ மீட்டர்களுக்காவது செலுத்த முடியும். அத்தோடு தற்போது இருக்கும் நவீன ராடர் தொழில்நுட்பம் மோசமான காலநிலை உள்ள இடங்களை முன்கூட்டியே அறிந்து, அவற்றில் இருந்து பாதையை மாற்றிச் செல்லவும் உதவுகின்றன.

மிகவும் மோசமான காலநிலையால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகமாக ஆராயப்பட்ட இன்னுமொரு விபத்தாக, 2009இல் அத்திலாந்திக் கடலில் ஏர் பிரான்ஸ் விமானம் காணாமல் போன சம்பவத்தை கூறலாம். இந்தச் சம்பவத்தின் போது காற்று மண்டலத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலை குறித்த எச்சரிக்கைகளை விவாதிக்க அந்த விமானி தவறிவிட்டார். அதற்கு போதுமான பயிற்சி அவருக்கு இருக்கவில்லை.

விமான இறக்கையிலோ அல்லது வால் பகுதியிலோ பனி படிவதன் மூலமும் விபத்துக்கள் ஏற்படலாம். ஆனால், அதனை தவிர்க்க விமானியால் முடியும். அத்துடன் இடிகளால் உருவாகும் மின்சாரத்தை தாக்குப் பிடிக்கும் ஏற்பாடுகள் இப்போது விமான இறக்கைகளில் உள்ளன.

ஒவ்வொரு வணிக ரீதியிலான விமானமும் வருடாந்தம் ஒரு தடவையாவது இடியால் தாக்கப்படுவதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.

கடுமையான மழை அல்லது ஆலங்கட்டி மழை விமான என்ஜின்களில் தீச்சுவாலையை ஏற்படுத்தலாம். ஆனால், என்ஜினே அதனை அணைத்துக்கொள்ளும். அப்போது அந்த என்ஜினை விமானி மீளவும் இயங்கச் செய்யலாம். ஆனால் அதனை எல்லா சந்தர்ப்பங்களிலும் செய்துவிடமுடியாது.

ஆகவே மோசமான காலநிலையால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டுவிடுவது மிகவும் குறைவாகும். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், நடந்த விபத்துக்களில் அரைவாசி ஓடுபாதையின் பாதுகாப்பு குறைபாடுகளால் நடந்தவையாகும்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...