Saturday, May 9, 2015

பணத்தை கொடுப்பது தானே நியாயம்

இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுவரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அதுவும் இலவசக்கல்வி என்பது கட்டாயம் என்ற உன்னதநோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டம்தான், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆகும் செலவுகள், ஆசிரியர் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே மானியமாக தந்துவிடுகிறது. ஆனால், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு அரசு மானியம் கிடையாது என்பதால், இத்தகைய பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கப் பட்டு, அந்த வருமானத்தைக்கொண்டுதான் ஆசிரியர் களுக்கு சம்பளம் முதல் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் என்று அனைத்து செலவுகளையும் தனியார் பள்ளிக்கூடங்கள் சமாளித்து வருகிறது.

இந்த நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழக அரசின் கல்வித்துறை 1–4–2013 மற்றும் 12–5–2014–ல் பிறப்பித்த அரசு உத்தரவுகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிக்கூடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடம் வழங்கவேண்டும். இந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணம், சீருடைக்கான செலவு உள்பட அவர்களுக்கு ஆகும் செலவுகளை அரசே தந்துவிடும் என்பது திட்டவட்டமாக அந்த சட்டத்தில் உறுதிபட தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தில் பல குழப்பங்கள் இருந்தன.

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் இந்த ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கத் தேவையில்லை என்பதும், வெறும் கல்வி கட்டணத்தை மட்டும் தந்து அந்த ஏழை மாணவர்களை அந்த பள்ளிக் கூடத்துக்கு அனுப்பும்போது அங்கு படிக்கும் மற்ற வசதிபடைத்த குழந்தைகள் அனுபவிக்கும் வசதிகள் எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், இந்த குழந்தை களுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகி, அது அவர்களின் படிப்பை பாதிக்கிறது என்றெல்லாம் குறைகள் கூறப்படுகிறது. என்றாலும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 593 ஏழை மாணவர்கள் இந்த 25 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக கடந்த 4–ந்தேதி முதல் விண்ணப்பம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு கொடுக்கப்படவில்லை. காரணம் கடந்த 2 ஆண்டுகளாக இவ்வாறு ஏழை மாணவர்களை தங்கள் பள்ளிக்கூடங்களில் சேர்த்ததற்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசாங்கமோ, மாநில அரசோ தராத நிலையில், தங்களால் இந்த ஆண்டு எப்படி சேர்க்கமுடியும். மாணவர்களின் கல்விக்கட்டணத்தை வைத்துதானே எங்கள் நிர்வாக செலவை எதிர்கொள்ளமுடியும். ஆக, எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தாருங்கள், நாங்கள் மாணவர்களைச் சேர்க்கிறோம் என்கிறார்கள், சுயநிதி பள்ளிகளின் நிர்வாகிகள். தமிழக அரசோ, மத்திய அரசாங்கம் இதற்காக தரவேண்டிய 97 கோடியே 4 லட்ச ரூபாயை தரவில்லை, கேட்டு எழுதியிருக்கிறோம் என்கிறார்கள். இந்த காரணம், சரியாக இராது.

தமிழக அரசு முதலில் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இந்த நிதியை தங்கள் பணத்தில் இருந்து கொடுத்து உடனடியாக மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்கவேண்டும். பிறகு மத்திய அரசாங்கத்திடம் நாங்கள் கொடுத்துவிட்டோம், நீங்கள் தாருங்கள் என்று வலியுறுத்தி கேட்டுப்பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக இத்தகைய திட்டங்களை போடும்போது, அதற்கான நிதியை தயாராக வைத்துக் கொண்டு அமல்நடத்தினால் நல்லது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024