Tuesday, May 5, 2015

லஞ்சத்துக்கு வைத்த ஆப்பு

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மக்களுக்கும் சமுதாயத்துக்கும், தேவையான பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சமுதாயத்தில் புரையோடிப்போய் உள்ள லஞ்சத்தை ஒழிக்க புதிய சட்டத்திருத்த மசோதா, தீவிர காடுவளர்ப்பு திட்டத்தை அமல்படுத்த ரூ 38 ஆயிரம் கோடியை பயன்படுத்த வகை செய்யும் மசோதா, ரூ 48 ஆயிரம் கோடி செலவில் புதிய 100 நவீன நகரங்கள், ரூ 50 ஆயிரம் கோடி செலவில் 500 நகரங்களை மேம்படுத்தல், நகர்ப்புற பகுதிகளில் ஏழை மக்களுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான காலத்தை 2 ஆண்டுகள் நீட்டித்தல், நலிந்துவரும் சர்க்கரைத்தொழிலுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் உதவ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்துதல், என்று பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் மக்கள் மிக முக்கியமாக கருதி வரவேற்பது லஞ்சத்துக்கு ஆப்பு வைக்கும் சட்டதிருத்த மசோதாவுக்கான ஒப்புதல்தான். ஒருபுறம் லஞ்சத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை, மறுபுறம் நேர்மையான அதிகாரிகள் எந்தவித அச்சமுமின்றி துணிந்து செயல்பட இந்த மசோதா வழிகாட்டியுள்ளது. லஞ்சம் என்பது கொலை, கற்பழிப்பு போல ஒரு கொடுங்குற்றமாக கருதப்பட இந்த மசோதா வழிவகுக்கும். லஞ்சம் வாங்குபவர் மட்டுமல்லாமல் அதைக் கொடுப்பவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கும் பிரிவுகள் இந்த மசோதாவில் இருக்கிறது. பணமாக வாங்குவது மட்டுமே லஞ்சம் அல்ல, மற்ற வகைகளில் சலுகைகள் பெறுவதும் அதாவது விருந்தோபசாரம், வெளிநாடு சுற்றுப்பயணம், பிள்ளைகள் வெளிநாடுகளில் படிக்க உதவி பெறுவது, செக்ஸ் ஏற்பாடுகளை பெறுவது உள்பட பல வசதிகளை பெறுவதும் கொடுங்குற்றங்களாக கருதப்படும். இதுவரையில் லஞ்சம் வாங்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்ச தண்டனை 6 மாதம் என்றும் அதிகபட்ச தண்டனை 5 ஆண்டுகள் என்றும் இருந்தது. இந்த புதிய மசோதாவில் லஞ்சம் கொடுங்குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகள் என்றும் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் லஞ்சம் வாங்கியவர்களின் சொத்துக்களை முடக்கும் அதிகாரம் விசாரணை நீதிமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. இது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு என்னவென்றால் லஞ்ச வழக்குகளை அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்குள் புலன் விசாரணை செய்து, விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான்.

ஒட்டுமொத்த சமுதாயமே லஞ்சத்தை ஒழிக்க வேண்டும், தூய்மையான நிர்வாகம் வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தாலும் அதற்கான சட்டங்கள் பலம் இல்லாமல் இருந்ததால் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஊழல் பெருச்சாளிகள் தப்பித்து வந்தன. ஆனால் இந்த புதிய சட்டம் அனைத்து ஓட்டைகளையும் அடைத்துவிட்டது. ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம் மோடி அரசாங்கத்தின் புதிய திருத்தங்களோடு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதிலும் அரசியல் நுழைந்துவிடாமல் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு கிளம்பிற்றுகாண் சிங்கக்கூட்டம் என்று மக்கள் பாராட்டும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் சட்டத்தை உருவாக்கித் தந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய அமைப்புகள் சமுதாய கடமையாக செயல்படுத்தி லஞ்சத்தை ஓட ஓட விரட்ட வேண்டும். இந்த சட்டத்தின் பலன் அதை திறம்பட செயல்படுத்துவதில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024