Wednesday, May 6, 2015

வரக்கூடாத காதல்!

ஆசிரியர் பணி அறப்பணி; அதற்கு உன்னை அர்ப்பணி’ என்பது ஆண்டாண்டுகாலமாக கூறப்படும் நன்மொழி. ஒரு குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் வரைக்கும்தான் பெற்றோரின் வழிகாட்டுதலில் இருப்பார்கள். அதுவும் இப்போது 3 ஆண்டுகளாக குறைந்துவிட்டது. ஆக, 3 வயதில் இருந்து, வாழ்க்கையை தானே தொடங்கும்வரை, மழலை வகுப்பில் இருந்து கல்லூரி படிப்பை முடிக்கும் 18 ஆண்டுகளுக்கு மேலாக, கல்வி புகட்டுவதில் இருந்து ஒழுக்க நெறிகளை கற்றுக்கொடுப்பது, சிறந்த குணநலன்களை அவர்களுக்குள் விதைத்து சமுதாயத்துக்கு சிறந்த மக்களை தரும் பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது. ஆசிரியர்களின் பிரதிபலிப்பாகத்தான் மாணவர்கள் அறிவு, ஆற்றல், குணநலன்களில் மிளிருவார்கள். ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு முன்மாதிரிகள் (ரோல்மாடல்கள்). இந்த அருமையான சமூகவலைக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ? என்று அஞ்சும் வகையில், சமீபகாலங்களாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் ஆசிரியர்களால் அரங்கேற்றப்படுவது வேதனையாக இருக்கிறது.

தன்னிடம் படிக்கவரும் பிஞ்சு மலர்களையே கசக்கி எறிவதுபோல, சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்கள். பட்டம்பெற்று ஆசிரியர் பொறுப்புக்கு வரும் இளம் ஆசிரியைகள் தன்னிடம் படிக்கும் ‘டீன் ஏஜ்’ என்று கூறப்படும் பதின் பருவம், அதாவது 15, 18 வயது மாணவர்களையே தன் காதல் வலையில் வீழ்த்தி, தகாத உறவுகளை கற்றுக்கொடுத்து இழுத்துக்கொண்டு ஓடி, சில நேரங்களில் மாலையும் கழுத்துமாக மணமக்களாக வலம்வரும் காட்சியைப் பார்க்கும்போது, நிச்சயமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது. இப்போதுதான் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் பையன்களையும், பெண்களையும் படிக்க அனுப்ப மும்முரமாக இருக்கும் நேரத்தில், இப்படி சம்பவங்கள் பெற்றோரை அச்சப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஓர் ஆசிரியர் சங்கம், ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும், பெண் ஆசிரியர்களை ‘ஓவர் கோட்டு’ அணியச்சொல்லவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. உடை கட்டுப்பாடெல்லாம் கொண்டு வருவதால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. மாணவர்களை வேண்டுமானால் சலனப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், ஆசிரியர்களின் மனதில் கறைபடியாமல் இருக்கவேண்டுமானால், ஆசிரியர் பயிற்சி கல்வியில் ஒழுக்க நெறிமுறைகளை பாடத்திட்டத்தில் முக்கியமாக சேர்க்கவேண்டும். புதிதாக எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ள பாடத்திட்டத்தில், மருத்துவ தொழில் முக்கியத்துவத்தோடு, மருத்துவர்களின் நெறிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதுபோல, ஆசிரியர்களின் மனோபாவத்தில் தூய்மை நிலவும் பாடத்திட்டங்களை சேர்க்கவேண்டும். 18 வயதில் திருமணம் செய்வது சட்டப்பூர்வமானது என்றாலும், இப்படி ஆசிரியர்–மாணவர் திருமணம் ஆசிரியர்களின் ஒழுக்க நெறிமுறைகளுக்கு மாறானது என்ற வகையில், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பணிநெறிமுறையில் சேர்த்து, மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளதுபோல, நல்ல ஒழுக்கம் இல்லாமல் ஒரு ஆசிரியர் இருக்கமுடியாது. அது இல்லை என்றால் அவர்கள் உப்புத்தன்மை இல்லாத உப்பை போலத்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள், அந்த உயர்ந்த நிலையில் இருந்து அவர்கள் கீழ்நிலைக்கு வந்துவிடக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதுபோல, நன்னடத்தைக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர்கள் திகழவேண்டும். அவர்கள் பொறுப்பில் நம்பிக்கையோடு விடப்பட்டுள்ள மாணவர்களுக்கு நற்குணங்களை ஊட்டவேண்டும். நீதிபதி எஸ்.வைத்தியநாதன் சொன்னது, அதில் அர்த்தமுள்ளது. இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு அனுப்பி பொன்மொழியாக பின்பற்ற சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024