Tuesday, May 5, 2015

வண்டு கடியால் பாதிக்கப்பட்டவருக்கு நாய்க்கடி சிகிச்சை

காஞ்சிபுரம்: வண்டு கடித்ததால் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பாதிக்கப்பட்ட வாலிபருக்கு, நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 33; பெயின்டர்.கடந்த வாரம் வியாழக்கிழமை, தன் விவசாய நிலத்தில், பாலசுப்ரமணி வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, வண்டு ஒன்று, எதிர்பாராத விதமாக, அவரது கையில் கடித்து விட்டது. கை வீங்கத் துவங்கியது. மறுநாள் காலை, காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.புறநோயாளிகளுக்கான சீட்டை பெற்று, பொது மருத்துவப் பிரிவு மருத்துவரை அணுகியுள்ளார்.பாலசுப்ரமணியை பரிசோதித்த மருத்துவர், ஏ.ஆர்.வி., (ஆன்டி ரேபீஸ் வேக்சின்) என்ற ஊசி போடும் படி, சீட்டில் எழுதி, கொடுத்துள்ளார்.அதை பெற்றுக்கொண்டு ஊசி போடும் இடத்திற்கு சென்ற பாலசுப்ரமணிக்கு, ஊசி போடப்பட்டது. மேலும், அவரை 4ம் தேதி வரும்படி அறிவுறுத்தினர்.அதன்படி, நேற்று காலை மீண்டும், அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அவர் சென்றபோது, பொது மருத்துவப் பிரிவில், வேறு ஒரு மருத்துவர் இருந்துள்ளார்.பாலசுப்ரமணியின் கையில் உள்ள புண்ணை பரிசோதித்த மருத்துவர், அவரை தோல் வியாதிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை பார்க்க அறிவுறுத்தியுள்ளார்.இதனால், தோல் வியாதி பிரிவுக்கு சென்ற பாலசுப்ரமணி, பழைய சீட்டை காட்டி வண்டு கடித்துவிட்டது; இரண்டாவது ஊசியை போடும்படியும் கேட்டுள்ளார்.
மருத்துவச் சீட்டை பார்த்த மருத்துவர், அதில் நாய்க்கடிக்கு ஊசி போடும்படி எழுதியிருப்பதை பார்த்து, பாலசுப்ரமணியிடம் விசாரித்துள்ளார். அவரும் தனக்கு வண்டு கடித்து பாதிக்கப்பட்டதை கூறியுள்ளார்.இதனால், அதிர்ச்சி அடைந்த மருத்துவர், 'வண்டு கடிக்கு ஊசி தேவையில்லை; மாத்திரை மட்டும் போதும்' என, சீட்டு எழுதிக் கொடுத்துள்ளார்.
அரசு மருத்துவமனை, அதுவும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணி கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சை அளித்த மருத்துவர், வண்டுக்கடிக்குத்தான் ஊசி போட எழுதி தந்திருப்பார் என நம்பினேன். ஆனால், இரண்டாவது முறையாக ஊசி போட வந்தபோது தான், அதிர்ச்சியான உண்மை எனக்கு தெரிய வந்தது.அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், நோயாளிகளின் வாழ்க்கையில் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த பிரச்னை தொடர்பாக, மருத்துவமனை இணை இயக்குனரை தொடர்பு கொண்டு விளக்கம் பெற முயன்றபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், 'சாதாரண நோய்க்கு பதில், நாய்க்கடி ஊசி போட்டால் பாதிப்பு எதுவும் இருக்காது. நோயாளியின் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், இரண்டு மணி நேரத்தில் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கும். இதனால், எந்த பாதிப்பும் ஏற்படாது; இருந்தாலும், கவன குறைவாக சிகிச்சை அளித்தது தவறுதான்' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024