Tuesday, August 8, 2017

அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை மழைக்காலங்களில் குளமாகும் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட்

2017-08-07@ 21:24:27




பாரத ரத்னா எம்ஜிஆர் மத்திய பஸ் நிலையமானது சேலம் மக்கள் மட்டுமல்லாது பிற மாவட்ட பயணிகளாலும் அதிகம் அறியப்பட்ட ஒன்று. கடந்த 25 வருடங்களுக்கு முன் சேலம் பழைய பஸ் நிலையம் மட்டுமே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடுமையான போக்கு வரத்து நெரிசல் மற்றும் இடபற்றாக்குறை காரணமாக சேலம் மாநகராட்சியின் மூலம் அச்சுவான் ஏரி கையகப்படுத்தப்பட்டு கடந்த 1994ம் ஆண்டு சேலம் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் 50 ஆயிரத் துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். சேலம் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை, ஓசூர் ஆகிய வெளிமாவட்ட பஸ்கள் முதல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பஸ்கள் வரை வந்து செல்கிறது. இதனால், பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் மத்திய பஸ் நிலையமானது தண்ணீர் தேங்கி குளமாக காட்சியளிக்கிறது. இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஏரியாக இருந்து மாற்றப்பட்ட புதிய பஸ் நிலையம் 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மழைநீர் புகாத வண்ணம் தரைதளம் அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் பஸ் நிலையம் வரும் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டுக்குள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளினால் பயணிகள் நடப்பதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை.

மழைக்காலங்களில் பஸ் நிலையம் முழுவதையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பஸ் ஸ்டாண்டிலிருந்து வேறு பஸ் பிடிக்க வெளியே வர முடிவதில்லை. சேலம் மாநகராட்சியால் பஸ் நிலையத்திற்கு இன்னும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் தரைதளம் அமைக்கப்படவில்லை. இதனால், சிறிதளவு மழை பெய்தாலும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீர் பஸ் ஸ்டாண்டு கடைகளுக்குள் புகுந்துவிடுகிறது. குளம்போல் தேங்கியுள்ள மழைநீரிலேயே பேருந்துகள் செல்லும்போது சேரும் சகதியுமாக தேங்கிய மழைநீரை பயணிகளின் மீது வாரி இறைத்து செல்கிறது.

மேலும், பஸ் நிலையத்தை சுற்றிய பகுதிகளில் சிறுநீர் கழிப்பதால், சிறுநீர் நாற்றம் அதிகளவில் வீசுகிறது. இதனால், வெளியூர் பயணிகள் மத்தியில் சிறுநீர் பஸ் நிலையம் என்ற பெயரை சேலம் பஸ் நிலையம் பெற்றுள்ளது. பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. இது மாநகராட்சி அதிகாரிகளால் முறையாக பராமரிக்கப்படாததால் பயணிகள் திறந்தவெளி கழிப்பிடத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், பஸ் நிலையம் முழுவதும் கடுமையான துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

பயணிகள் நடைமேடைகளை ஆக்கிரமித்து பழ வியாபாரிகள் முதல் பலரும் கடைகளை வைத்துள்ளதால் நடைமேடைகளில் நடக்க முடியாமல் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்காலிகமாக கடை களை அகற்றும் வியாபாரிகள் அதிகாரிகள் சென்றவுடன் கடைகளை வைத்துக்கொள்கின்றனர். கடந்த ஒருமாதத்திற்கு முன் மாநகராட்சி பஸ் நிலையத்தில் ₹5 கோடி மதிப்பில் நடைமேடை அமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கியுள்ளது. இதனை மாற்றி அமைத்து முதலில் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகாலும், தரைதளமும் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024