Wednesday, December 12, 2018

சாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி! - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்

எஸ்.மகேஷ்





கடன் பிரச்னையால், சென்னையில் உள்ள விடுதியில் தொழிலதிபர் ஒருவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல் (50). சென்னை, ஷெனாய்நகர் வெங்கடாசலபதி தெருவில் குடியிருந்தார். இவரின் மனைவி உமா (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சென்னையை அடுத்த மணலியில் அலுமினிய நிறுவனம் நடத்திவந்தார். தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக வங்கியில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், கிருஷ்ணவேல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், குடும்பத்தினருடன் சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜில் தங்கினார். அப்போது, வீட்டில் கட்டடப்பணிகள் நடப்பதால், விடுதியில் தங்குவதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய விடுதி ஊழியர்கள் அறை கொடுத்துள்ளனர். குடும்பத்தினருடன் 206-ம் நம்பர் அறையில் தங்கியுள்ளார்.



இன்று அதிகாலை, கிருஷ்ணவேலின் மகள் அழுதுகொண்டே தங்கும் விடுதியின் வரவேற்பு அறைக்கு ஓடிவந்தார். அவரிடம் விடுதி ஊழியர்கள் விசாரித்தபோது, அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது கிருஷ்ணவேல், உமா ஆகியோர் விஷம் அருந்தி இறந்துகிடந்தனர். தகவல் அறிந்ததும் எழும்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். குழந்தைகள் இருவருக்கும் மயக்க மருந்து கொடுத்து, அவர்கள் தூங்கிய பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. கிருஷ்ணவேல் எழுதிய மூன்று பக்கக் கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், வாங்கிய கடனுக்காக சொந்தமான இடத்தை உறவினர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்து பறித்துக்கொண்ட தகவல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ள தொழிலதிபர் கிருஷ்ணவேல், அவரின் மனைவி உமா ஆகியோர் முடிவுசெய்துள்ளனர். அப்போது குழந்தைகளைச் சாகடிக்க அவர்களுக்கு மனமில்லை. இதனால் தற்கொலை செய்வதற்கு முன் அவர்கள், குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். குழந்தைகள் மயங்கியபிறகு, இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துள்ளனர் என்ற தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



காலையில் மயக்கம் தெளித்த கிருஷ்ணவேலின் மகள், அப்பா, அம்மா இருவரும் வாயில் நுரைதள்ளியபடி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாகத் தனது சகோதரனை எழுப்ப முயற்சிசெய்துள்ளார். ஆனால், மயக்கம் காரணமாக அவர் கண்விழிக்கவில்லை. அதனால்தான் விடுதியின் வரவேற்பு அறைக்கு அவர் ஓடியுள்ளார். அங்கு தகவல் தெரிவித்தவுடன், இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். படுக்கையில் மயங்கிக்கிடந்த தொழிலதிபர் கிருஷ்ணவேலின் மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டது. அதன்பிறகே அவருக்கு மயக்கம் தெளிந்துள்ளது. அப்பாவும் அம்மாவும் இப்படி பண்ணிவிட்டார்களே என்று அவர் மருத்துவமனையில் கதறி அழுதார்.

ஒரே நேரத்தில் அம்மாவும் அப்பாவும் இறந்ததால், அவர்களின் மகனும் மகளும் கதறி அழுதச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய அப்பா, அம்மாவின் மரணத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024