Sunday, June 7, 2015

"தவறாகப் பயன்படுத்தப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்'

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.ராஜா தெரிவித்தார்.

சென்னை வர்த்தக சபை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டக் கருத்தரங்கில் அவர் பேசியதாவது: கடந்த 2005-ஆம் ஆண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டமாகும் இது.

இதன் வாயிலாக, அரசு செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை அறியவும், அங்கு நடைபெறும் ஊழல்களைக் கண்டறியவும் உதவும் என்ற நோக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டம் ஒரு சிலரால் தவறாகக் கையாளப்பட்டு வருகிறது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களால், தகவல் ஆணையத்தின் நேரமும், நீதிமன்றத்தின் நேரமும் வீணடிக்கப்படுகிறது.

அதாவது, பயனில்லா விவரங்களைக் கோரி விண்ணப்பிப்பதால் தகவல் ஆணையத்தின் முக்கியப் பணிகளில் தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்படுகிறது. இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.

கடந்த சில ஆண்டு முன்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கர் உருவச் சிலை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதற்கான இடத்தைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, சிலையை நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயே அமைக்க பரிந்துரை செய்தது. அதன்படி, நீதிமன்றத்தின் வளாகத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.

பின்னர் சிலை அமைத்தது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்ட இடத்துக்கு அருகே இருந்த 70 ஆண்டுகள் பழைமையான மரத்தின் இரு கிளைகள் வெட்டப்பட்டுள்ளன.

அதற்கான காரணத்தை நீதிமன்றம் விரிவாக எடுத்துரைக்க வேண்டும் என அதில் கேட்கப்பட்டிருந்தது. அந்த விண்ணப்பத்துக்கு, வெட்டப்பட்ட கிளைகள் எதிர் காலத்தில் வளரும்போது, சிலைக்கு சேதம் விளைவிக்கும் என்பதால் அவை வெட்டப்பட்டன என்று நீதிமன்றம் பதில் கூறியது.

இதுபோன்று பயனற்ற விவரங்களைக் கோருவது, அந்தச் சட்டம் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றார் நீதிபதி டி.ராஜா.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024