Sunday, June 21, 2015

தாத்தா சுயமாக சேர்த்த சொத்தில் பேரன், பேத்தி உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

தாத்தா சுயமாக சேர்த்த சொத்தில் பேரன், பேத்தி உரிமை கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்த கனகசபை நாயக்கர் என்பவருக்கு சொந்தமான நிலங்களை, அவர் இறந்த பிறகு மனைவியும், 5 மகன்களும் பிரித்துக் கொண்டனர். 5 மகன்களில் ஒருவரும், அவரது மகனும் சேர்ந்து 1995-ல் தனியார் நிதி நிறுவனத்தில் தங்களது நிலத்தை அடமானம் வைத்து ரூ.3.45 லட்சம் கடன் பெற்றனர். அந்த கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ.14 லட்சமாக உயர்ந்தது. இதனால் அடமான நிலத்தை ஏலம் விட நிதி நிறுவனம் முடிவு செய்தது.

ஏலத்தை எதிர்த்து வழக்கு

இதை எதிர்த்து நிலத்தை அடமான வைத்தவரின் மகள்கள் கலைச்செல்வி, கலைவாணி ஆகியோர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், அடமான சொத்தில் தங்களுக்கு பங்கு தர வேண்டும் எனக் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து நிதி நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் நேற்று பிறப்பித்த உத்தரவு:

வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்து மூதாதையர் சொத்து அல்ல. இரு பெண்களின் தாத்தா சுய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்து. அவர்களின் தந்தைக்கு மூதாதையர் சொத்து என்ற வகையில் சம்பந்தப்பட்ட சொத்து வரவில்லை. சட்டப்பூர்வ வாரிசுகளில் ஒருவர் என்ற முறையில் அந்த சொத்து வழங் கப்பட்டுள்ளது.

இப்பெண்களின் தந்தை அந்த சொத்தை அடமானம் வைக்கும்போது, அவரது மகனை சேர்க்க வேண்டியதில்லை. நிதி நிறுவனத்தை எச்சரிக்கும் விதமாக மகனை சேர்த்துள்ளார். அந்த சொத்தில் மகள்கள் உரிமை கோர முடியாது. இந்த வழக்கில் சொத்தில் உரிமை கேட்பவர்கள் எதிர் மனுதாரர்களாக இருந் தாலும் வழக்கை அவர்கள் நடத்தவில்லை. நிதி நிறுவனம் தான் நடத்தியுள்ளது.

சந்தேகம் வருகிறது

வேண்டும் என்றே சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாக சந்தேகம் வருகிறது. எனவே, கீழ் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...