Saturday, March 18, 2017

30-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது

மார்ச் 18, 02:45 AM
நாமக்கல்,

வருகிற 30-ந்தேதி முதல் நடக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் தமிழகத்தில் உள்ள 4 லட்சம் லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

அவசர பொதுக்குழு கூட்டம்

நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள பில்டர்ஸ் மகாலில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். தென் மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் 363 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அதில் 117 சுங்கச்சாவடிகள் தென்னிந்தியாவிலும் 41 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டிலும் உள்ளன. அதில் 26 சுங்கச்சாவடிகளில் வரி வசூல் செய்து கொள்வதற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் வரி வசூல் செய்து வருகின்றனர். இதை கண்டிக்கிறோம்.

லாரிகள் வேலைநிறுத்தம்

மாநில அரசு டீசல் மீது வாட் வரியை உயர்த்தி உள்ளதால் இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் டீசல் பிடிக்காமல் வெளிமாநிலங்களுக்கு சென்று டீசல் பிடிக்கிறது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, உயர்த்தப்பட்ட காப் பீடு கட்டணம், வாகன பதிவு கட்டணம், 15 ஆண்டு கடந்த லாரிகளை அழித்தல், டீசல் மீது வாட் வரி ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டி வருகிற 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளோம்.

இதனால் தென்னிந்திய அளவில் சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட மாட்டாது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி மதிப்பிலான வியாபாரம் பாதிக்கப்படும். இது நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 1.5 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்னிந்திய அளவிலான லாரிகள் சம்மேளனம் அறிவித்து உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் 30-ந்தேதி முதல் தமிழகத்தில் இயங்கும் சுமார் 4 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். எனவே மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் நடைமுறை உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...