Friday, December 14, 2018

மாவட்ட செய்திகள்

பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: இந்தோனேசியா விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது





கத்தாரில் இருந்து இந்தோனேசியாவுக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.

பதிவு: டிசம்பர் 14, 2018 03:45 AM
ஆலந்தூர்,

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு நேற்று அதிகாலை 247 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது அதில் பயணம் செய்த இந்தோனேசியா நாட்டை சேர்ந்த உத்தம் சியாம் லால் (வயது 50) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதுபற்றி அவர், விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தார். அவர்கள், விமானிக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அந்த விமானம், சென்னை வான் எல்லையில் பறந்து கொண்டு இருந்தது.

உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, விமானத்தில் பயணி ஒருவர் நெஞ்சு வலியால் துடிப்பதால் அவருக்கு உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். இதற்காக சென்னையில் அவசரமாக விமானத்தை தரை இறக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அந்த விமானம், அவசரமாக தரை இறக்கப்பட்டது. உடனே விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர், விமானத்தில் ஏறி நெஞ்சு வலியால் துடிதுடித்த பயணிக்கு முதலுதவி அளித்தனர்.

பின்னர் பயணி உத்தம் சியாம் லாலுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியது இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மருத்துவ கால விசாவை மனிதாபிமானத்துடன் வழங்கினார்கள்.

இதையடுத்து உத்தம் சியாம் லால், அந்த விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு மற்ற பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் இந்தோனேசியாவுக்கு புறப்பட்டு சென்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024