Wednesday, June 17, 2015

வடபழனி கோவிலில் அதிக திருமணங்கள்; போக்குவரத்து போலீஸ் பதிலளிக்க உத்தரவு

சென்னை : சென்னை, வடபழனி முருகன் கோவிலில், திருமணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்னை குறித்து, போலீஸ் அதிகாரிகள் பதிலளிக்கும்படி, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடபழனியைச் சேர்ந்த, பாண்டிய ராஜன் என்பவர், தாக்கல் செய்த மனு:

10 பள்ளிகள் : வடபழனி, முருகன் கோவிலில், ஆண்டுக்கு, 2,000 திருமணங்கள் வரை நடக்கின்றன. அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடப்பதால், கோவிலைச் சுற்றி வசிப்போர் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளுக்கு, குழந்தைகளை அனுப்ப முடியவில்லை. அவசர காலத்தில், மருத்துவமனைக்கு கூட செல்ல முடியவில்லை. முகூர்த்த நாட்களில், குடிநீர் லாரி கூட, எங்கள் தெருவுக்குள் வர முடியாது. திருமணத்துக்கு வருவோருக்கு, வாகன நிறுத்த வசதி இல்லாததால், வீடுகளின் முன் நிறுத்துகின்றனர்.கோவிலைச் சுற்றி, 10 பள்ளிகள் உள்ளன. திருமணங்களால், மாணவர்கள், சரியான நேரத்துக்கு பள்ளி செல்ல முடிவதில்லை. இதேபோன்று, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்தது. ஆனால், அதிகாரிகளின் கட்டுப்பாட்டினால், தற்போது, ஆண்டுக்கு, 84 திருமணங்கள் தான் நடக்கின்றன.

விசாரணை தள்ளிவைப்பு : கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவிலை விட பெரியது. சுமுகமான போக்குவரத்து, பொதுமக்களின் வசதிக்காக, வடபழனி முருகன் கோவிலில், திருமணங்களின் எண்ணிக்கையை குறைக்க கோரி, மனு அனுப்பினேன்.கடந்த மார்ச் மாதம் அனுப்பிய, என் மனுவை பரிசீலிக்கும்படி, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.

அரசு பிளீடர் மூர்த்தி ஆஜராகி, ''முகூர்த்த நாட்களில், திருமணங்கள் நடக்கின்றன. திருமணங்களை, மண்டபங்களில் விமரிசையாக கொண்டாட முடியாதவர்கள், கோவில்களில் திருமணத்தை நடத்துகின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து, போலீசார் தான் பதிலளிக்க வேண்டும்,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் சிவஞானம், மாலா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த

உத்தரவு:போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர், துணை ஆணையர் (தெற்கு) ஆகியோரை, இந்த வழக்கில் சேர்க்கிறோம். அவர்கள் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்படுகிறது. விசாரணை, ஆக., 4ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024