Saturday, March 19, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? - முகமூடி போட்டு வரும் போதைப்பொருட்கள்

Return to frontpage

டாக்டர் ஆர்.காட்சன்


நம் நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மதுதான். அடுத்து அதிகபட்சமாகப் புகைப்பழக்கம், கஞ்சா ஆகியவைதான் நினைவுக்கு வரும். ஆனால் மேற்கத்திய நாடுகள் மற்றும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் இவற்றைவிட ஆபத்துமிக்க போதைவஸ்துக்களான அபின், ஓபியம் வகைகள், LSD, கோகெய்ன் போன்றவை சர்வசாதாரணம்.

இவையெல்லாம் இந்தியாவில் சாமானியமாகக் கிடைக்காமல் இருப்பதற்கு ‘நார்கோடிக் மருந்து தடைச்சட்டம்’ மற்றும் அதன் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனை களும்தான் முக்கியக் காரணம்.

கஞ்சா

“கஞ்சா அடிச்சிப் பாரு, மனசுல இருந்து கற்பனை சும்மா கவிதையா கொட்டும், பூமில இருந்துட்டே சொர்க்கத்துக்குப் போயிட்டு வந்துடலாம்” என்றுதான் நண்பர்கள் இதை அறிமுகப்படுத்துவார்கள். கஞ்சாவுக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். பொருள், பொட்டலம், ஸ்டஃப், துண்டு உட்படப் பல பெயர்கள் இருக்கும். கஞ்சா இலைகளை, புகையிலை போல பீடி அல்லது சிகரெட்டினுள் வைத்து இழுத்தால் போதை வரும். எல்லா இடங்களிலும் இது வெளிப்படையாகக் கிடைப்பதில்லை. மதுரை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. கல்லூரி மாணவர்கள்தான் இதைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

ஆரம்பத்தில் இந்தப் போதை ஒருவித மயக்கத்தைத் தந்தாலும் நாளடைவில் கற்பனைத்திறன், சுறுசுறுப்பு எல்லாவற்றையும் மந்தமாக்கிவிடும். பின்பு மனச்சிதைவு நோய் போன்ற மோசமான மனநோய்களையும் உருவாக்கிவிடும். ஆரம்பத்திலேயே இதைப் பயன்படுத்தாமல் தடுப்பதுதான் சிறந்த ஒரே வழி.

பெட்ரோலியப் போதைப்பொருட்கள்

இதையெல்லாம் போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு, வளர்இளம் பருவத்தினர் சில பொருட்களைப் போதைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வகை பெட்ரோலிய வேதிப்பொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஒயிட்னர், ரப்பரை ஒட்டப் பயன்படும் பசைகள், பிளாஸ்டிக்கை ஒட்டப் பயன்படும் ஒரு வகை திரவம் உட்படப் பல திரவப்பொருட்கள்தான் இப்போது பள்ளி மாணவர்களிடையே புழங்குகின்றன.

பாதிப்புகள்

சிறுவயதிலேயே மூளை நரம்புகள் சுருங்கி ஞாபகமறதி நோய் ஏற்படுவது, இதன் முக்கிய பாதிப்புகளுள் ஒன்றாகும். மேலும் திடீர் ஆக்ரோஷம், வலிப்பு, கை நடுக்கம், மூச்சுத்திணறல், நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படும். பள்ளியிலோ வீட்டிலோ மாணவர்கள் இந்தப் பொருட்களைத் தேவையில்லாமல் அதிகப்படியாக வைத்திருப்பது தெரிந்தால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சிக்ஸ் பேக் சிக்கல்கள்

வளரிளம் பருவத்தில் உடல் கட்டமைப்பு மீது சிலருக்கு அதிகக் கவனம் ஏற்படும். ‘ஹிரித்திக் ரோஷன் சிண்ட்ரோம்’ என்று கூறும் அளவுக்கு உடற்பயிற்சி மூலம் கட்டழகு இளைஞனாக மாறுவதற்காக ‘ஜிம்’களுக்கு ஓட ஆரம்பிப்பார்கள். எல்லாவற்றிலும் அவசரப்படும் மூளை, இதிலும் எப்படியாவது சீக்கிரம் சிக்ஸ் பேக்கை வளர்த்துவிட வேண்டும் என்று நினைக்கும்போதுதான் சிக்கல் வருகிறது. இந்த நேரத்தில் நண்பர்கள் மூலமாகவும், சில நேரங்களில் ஜிம் மையங்கள் மூலமாகவும் ‘அனபாலிக் ஸ்டீராய்ட்’ (Anabolic Steroid) என்ற ஊசிமருந்தைப் பயன்படுத்தினால் சீக்கிரம் உடலை வளர்த்துவிடலாம் என்ற தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகின்றனர்.

இதைப் பயன்படுத்தினால் தசை வளர்ச்சி ஏற்படுவது உண்மைதான். ஆனால் உடலின் எல்லா உறுப்புகளையும் இது பாதிக்கும் என்பதுதான் நமக்குத் தெரியாத உண்மை. முக்கியமாக இது பல மனநோய்களையும், மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்வது நல்லதுதான். ஆனால் செடியை உரம் போட்டு வளர்ப்பது போல உடலை வளர்க்கும் விபரீத முயற்சிகள் வேண்டாம்.

வளரிளம் பெண்கள் ‘நாங்களும் இதற்குச் சளைத்தவர்கள் இல்லை’ என்று போட்டி போட்டுக்கொண்டு உடல் இளைப்பதற்குக் களம் இறங்குவார்கள். ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனாலும் ஆனார், அன்றிலிருந்து இந்திய வளரிளம் பெண்களுக்கு ‘ஸ்லிம் ஜுரம்’ பிடித்துக்கொண்டது.

இதற்காகப் பல நாள் பட்டினி கிடப்பது, கொழுப்பைக் குறைக்கிறேன் என்று தேவையான உணவைக்கூடப் புறக்கணிப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கு ‘அனோரெக்சியா’ (Anorexia nervosa) என்று பெயர். முற்றிய நிலையில் இது பெண்களின் ஹார்மோன் சுரப்பைப் பாதிப்பதால், பல்வேறு நோய்களை உருவாக்கும். இது ஒரு மனநோயாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...