Saturday, July 1, 2017

குழந்தை கடத்தல்

திருப்பதியில் காணாமல் போன குழந்தை மீட்பு : கடத்திய கள்ளக்காதல் ஜோடி போலீசில் சரண்

பதிவு செய்த நாள்

01ஜூலை
2017 
00:14

ராசிபுரம்: திருப்பதியில் காணாமல் போன ஆண் குழந்தையை, கடத்திய கள்ளக்காதல் ஜோடி நாமக்கல் அருகே, போலீஸ் ஸ்டேஷனில், குழந்தையுடன் சரணடைந்தது.

ஆந்திர மாநிலம், ஆண்டாபுரம் மாவட்டம், உருவகொண்டாவை சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசா, 35. இவர், கடந்த, 14ம் தேதி திருப்பதிக்கு தன் குடும்பத்துடன் சென்றார். 
இவருடைய, ஒன்பது மாத ஆண் குழந்தை சென்னகேசவலு, கோவில் வளாகத்தில் தவழ்ந்து விளையாடிய போது மாயமானது. இது குறித்து, வெங்கடேசா, திருமலை போலீசில் புகார் செய்தார். 15, தனிப்படை அமைத்து, குழந்தையை தேடி வந்தனர்.கடந்த, 14ம் தேதி திருமலையில் இருந்த வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், வாலிபர் ஒருவர் குழந்தையை துாக்கிச் சென்றது தெரிந்தது. 

வீடியோ பதிவு : மேலும், பல்வேறு வீடியோ பதிவில், அந்த நபர் சுடிதார் போட்ட பெண்ணுடன் வந்ததும், தொடர்ந்து குழந்தையை துணியால் மூடி, துாக்கிச் சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, அந்த வீடியோ பதிவுகள், 'டிவி' மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, பேளுக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு, குழந்தையுடன் வந்த தம்பதி சரண் அடைந்தனர். போலீசார் விசாரணையில், ராசிபுரம் அடுத்த, சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி அசோக், 24, அவரது கள்ளக்காதலி தங்காயி, 24, என்பது தெரிந்தது. கடந்த, 14ல் திருப்பதி சென்ற போது, அங்கு தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த ஆண் குழந்தையை, துாக்கி வந்ததாக, போலீசாரிடம் தெரிவித்தனர். பின், குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

நாமக்கல் எஸ்.பி., அருளரசு, ஆந்திரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தனிப்படை போலீசார் பேளுக்குறிச்சி வந்து குழந்தையை பெற்றுக்கொண்டனர். அசோக், தங்காயி ஜோடியை கைது செய்து, ஆந்திரா மாநிலத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை, திருமலை போலீசார், குழந்தை சென்னகேசலுவை திருமலைக்குகொண்டு வந்து, குழந்தையின் பெற்றோரிடம் 
ஒப்படைத்தனர்.

கள்ளத்தொடர்பு : இது குறித்து, போலீசார் கூறியதாவது: குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில், 'வீடியோ புட்டேஜ்' சமூக வலைதளங்களில் வெளியானது. அதை பார்த்த கள்ளக்காதல் ஜோடி, போலீசில் குழந்தையை ஒப்படைத்து, சரணடைந்தனர். திருமணமாகாத அசோக்குக்கு, கட்டட வேலைக்கு செல்லும் போது, தங்காயி உடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரு பெண் குழந்தைகள் உள்ளன. கணவர், குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த அவர், கடந்த, ஒன்றரை ஆண்டாக, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில், அசோக்குடன் வேலை செய்து வந்தார். தற்போது, சொந்த ஊருக்கு வர திட்டமிட்டதால், 'குழந்தையுடன் சென்றால் தான், தம்பதியாக ஊரில் ஏற்றுக் கொள்வர்' என, முடிவு செய்து, திருப்பதி கோவிலுக்கு சென்று, அங்கிருந்து குழந்தையை கடத்தி வந்துள்ளனர். திருப்பதி குழந்தை திருட்டு குறித்து வேகமாக தகவல் பரவியதால், போலீசாருக்கு பயந்து குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024