Monday, October 2, 2017

கொட்டிய கன மழையால் மக்கள் நிம்மதி : குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என நம்பிக்கை
பதிவு செய்த நாள்
அக் 02,2017 00:21

குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தினருக்கு, நிம்மதி தரும் வகையில், கன மழை கொட்டி தீர்த்தது. தமிழகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், கடலுார் போன்ற வட மாவட்டங்களில், இரண்டு ஆண்டுகளாக பருவ மழை ஏமாற்றியதால், ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. வட மாவட்டங்களில், ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.

 நேற்று முன்தினம் இரவும், சென்னை, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், கன மழை கொட்டியது. 

இதனால், முக்கிய குடிநீர் ஆதாரமான புழல், செங்குன்றம், சோழவரம் போன்ற ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக, எண்ணுாரில்,14 செ.மீ., மழை பதிவானது. பூண்டி, 13; சோழவரம், 12; தாமரைப்பாக்கம், 11; ஸ்ரீபெரும்புதுார், 10; பொன்னேரி, 9; திருவள்ளூர், 8; பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், தாம்பரம், 5; திருத்தணி, 4; கேளம்பாக்கம், விமான நிலையம், அடையாறு, 3; மற்ற இடங்களில், 1 முதல், 2 செ.மீ., மழை பதிவானது.

நாளை காலை, 8.30மணி வரை உள்ள, 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை காரணமாக, ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

விமானங்கள் தாமதம் : சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல், நேற்று காலை, 6:30 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், குவைத், சார்ஜா, கொழும்பு, லண்டன் ஆகிய வெளிநாட்டு நகரங்களில் இருந்து வந்த விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், ஐதராபாதிற்கு திருப்பி விடப்பட்டன. இதேபோல், புனே, அந்தமான், மற்றும் ஐதராபாத் நகரங்களில் இருந்து, சென்னை வந்த விமானங்கள், அருகில் இருந்த விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

நேற்று காலை, 6:30 மணிக்கு நிலைமை சீரானதும், பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட, 14 விமானங்கள், நேற்று காலை, 7:30 மணி முதல், சென்னையில் தரையிறங்கின.
விமானங்கள் தாமதத்தால் பயணியர் சிரமப்பட்டனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024