Friday, October 6, 2017

மாநில செய்திகள்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியின்முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை



சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியின் முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அக்டோபர் 06, 2017, 04:15 AM
சென்னை,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ராஜூ சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் என் மனைவி பாக்கியாவை பிரசவத்துக்காக சேர்த்தேன். அங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லாததால் என் மனைவிக்கு சிகிச்சை அளிக்கவில்லை. முதுகலை மருத்துவ மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதுடன், மற்ற டாக்டர்களையும் பணி செய்யவிடாமல் தடுப்பதும் தெரியவந்தது. வேறுவழியின்றி என் மனைவியை வேறொரு மருத்துவமனையில் சேர்த்தேன். நோயாளிகள் பாதிக்கப்படுவதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதுகலை மருத்துவ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

டாக்டர்களை கடவுளாக மக்கள் பார்க்கிறார்கள். கடவுளே போராட்டத்தில் ஈடுபடலாமா? முதுகலை மருத்துவ மாணவர்கள் ஏற்கனவே மருத்துவ படிப்பை முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். சாதாரண தொழிலாளர்களை போன்று டாக் டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல.

டாக்டர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராட பல்வேறு வழிகள் உள்ளன. டாக்டர்களின் போராட்டம் காரணமாக ஏழைகள் தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்கும் 211 பேரில் 151 பேர் அரசு மருத்துவமனையில் டாக்டர்களாக உள்ளனர்.

அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு மேற்படிப்பு படித்து வருகின்றனர். மற்ற 60 பேருக்கு அரசு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசிடம் இருந்து சம்பளம் மற்றும் உதவித்தொகையை பெற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கவோ, மற்ற டாக்டர்களை பணி செய்யவிடாமல் தடுக்கவோ முடியாது.

ஏதாவது ஒரு காரணத்தை கூறி இந்த புனிதமான பணியை மேற்கொள்ள மாட்டோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே, முதுகலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவும், மற்ற டாக்டர்கள், பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024