Tuesday, March 24, 2015

பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர்கள் விவரம் 'போச்சு!'...DINAMALAR 24.3.2015



பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 'பார்கோடு' முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம், சரிபார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடந்த 5ம் தேதி துவங்கிய, பிளஸ் 2 பொதுத்தேர்வில், புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், தேர்வுத் துறை மூலம், மாவட்டந்தோறும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மாவட்டங்களில் தேர்வுப் பணி நியமனத்தில் நடந்த குளறுபடிகளால், தேர்வுப் பணிக்கு புதிதாக வந்தவர்கள் நிபந்தனைகளை கடைபிடிக்க முடியாமல், பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து, தேர்வுத் துறை மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்தத்தில் முறைகேடுகளை தடுக்க, விடைத்தாளில், மூன்று பார்கோடுகள் கொண்ட முகப்புச் சீட்டு (டாப் ஷீட்) இணைக்கப்பட்டிருக்கும். அதில், மாணவரின் பதிவு எண், பள்ளியின் பெயர், புகைப்படம் போன்ற தகவல்கள் இருக்கும். அதனால், விடைத்தாளில் தங்கள் பதிவு எண் எழுதக் கூடாது என, மாணவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதே நேரம், தேர்வு முடிந்ததும், விடைத்தாள்களை ஆசிரியர்கள் பெற்று, முகப்புச் சீட்டில், மூன்று பிரிவு பார்கோடு பகுதியில், ஒரு பார்கோடு பகுதியை மட்டும் கிழித்துக் கொண்டு, இரண்டு பகுதிகளுடன் தலைமைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், பல தேர்வு மையங்களில், கடைசி நேரத்தில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டதால், அவர்களில் பலர், தேர்வுத் துறை நிபந்தனைகள் தெரியாமல் குழம்பினர். அதனால், முதல் நாள் நடந்த, தமிழ் முதல்தாள் தேர்வில் மட்டும், விடைத்தாளிலுள்ள முகப்புச் சீட்டை, சில தேர்வு மையங்களில் முழுவதுமாக கிழித்து விட்டனர். இதனால், விடை திருத்தும் மையங்களுக்கு வந்த விடைத்தாள்களில், முகப்புச் சீட்டு இல்லாமல், எந்த மாணவருக்கு சொந்தமான விடைத்தாள் என்பது தெரியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, உடனடியாக தகவல் அனுப்பப்பட்டு, அந்தந்த தேர்வு மைய ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களைக் கொண்டு, முழுமையாக இருக்கும் முகப்புச் சீட்டின் கையெழுத்துகளை சரிபார்த்து, அவற்றை விடைத்தாளுடன் பொருத்திப் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...