Sunday, March 22, 2015

வாட்ஸ்–அப்’ பெயரை கேட்டாலே அதிரும் போலீசார்; கசியும் ரகசிய உரையாடல்கள்

கசியும் ரகசிய உரையாடல்களால், ‘வாட்ஸ்–அப்’ பெயரை கேட்டாலே போலீசார் அதிருகிறார்கள். முக்கியமான தகவல்களை நேரிலே பரிமாறிக் கொள்கிறார்கள்.

‘வாட்ஸ்–அப்’

நாகரிக–அறிவியல் வளர்ச்சி காரணமாக ‘இ–மெயில்’, ‘பேஸ்–புக்’, ‘டுவிட்டர்’ என தகவல் தொழில்நுட்ப துறையில் அடுத்தடுத்து பல புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. தற்போது தகவல் பரிமாற்றத்தில் புதிய மைல் கல்லாக ‘வாட்ஸ்–அப்’ அப்ளிகேஷன் அமைந்துள்ளது.

இன்றைய இளைய சமுதாயத்தினர் பலர் ‘வாட்ஸ்–அப்’ மோகத்தால் பசி மறந்து, தூக்கம் மறந்து தங்கள் பொழுதை கழித்து வருகிறார்கள்.

சாதக–பாதகங்கள்

‘வாட்ஸ்–அப்’ மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், அவசிய, அரிய தகவல்களை பரிமாறிக்கொள்ளும் சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நடிகைகளின் ஆபாச படங்கள், ‘செக்ஸ்’ வீடியோக்கள், ‘செக்ஸ்’ உரையாடல்கள் ஒரு சில சமூக விரோதிகளால் வெளியாகி பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

சென்னை நகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் போலீஸ் ஒருவருடன் பேசிய ரகசிய ‘செக்ஸ்’ உரையாடல் கடந்த சில தினங்களுக்கு ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘‘வேலியே பயிரை மேய்வது போல’’ வெளியான போலீஸ் அதிகாரியின் உரையாடல் பொதுமக்கள் மத்தியில் போலீசாருக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியது.

பெண் துணை கமிஷனர் நடவடிக்கை

இதேபோல பணியில் தவறு செய்த இன்ஸ்பெக்டர் ஒருவரை, சென்னை மாநகர போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி கண்டிப்புடன் வசைபாடிய உரையாடல் ஒன்று சமீபத்தில் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி, ‘இப்படியும் நேர்மையான, துணிச்சலான அதிகாரிகள் தமிழக காவல்துறையில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற ‘இமேஜை’ பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதாண்டா போலீஸ் என்பதற்கு எடுத்துக்காட்டாக லட்சுமியின் கண்டிப்பான பேச்சுக்கள் அந்த ‘வாட்ஸ்–அப்’ செய்தியில் இடம் பெற்றுள்ளது. உதவி கமிஷனரின் பேச்சால் தலைகுனிய வைத்தவர்களின் நெஞ்சை பெருமையால் நிமிர வைத்துள்ளார்.

போலீசாருக்கு ‘ஆப்’பாக மாறும் ‘வாட்ஸ்–அப்’

‘‘பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல...’’ என்று சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி வசனம் பேசுவார். அந்த வசனம் தற்போது போலீசாருக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

ஏனென்றால், கசியும் ரகசிய உரையாடல்களால் ‘வாட்ஸ்–அப்’ போலீசாருக்கு ‘ஆப்’பாக மாறி உள்ளது. இதனால் ‘வாட்ஸ்–அப்’ என்ற பெயரை கேட்டாலே பல போலீசார் அதிர தொடங்கி உள்ளனர்.

‘வாட்ஸ்–அப்’ அப்ளிகேஷனில் இருந்து பலர் வெளியேறவும் தொடங்கி விட்டார்கள். ‘வாட்ஸ்–அப்’ வசதிகளை பெறக் கூடிய ‘ஆண்ட்ராய்டு’ செல்போனை பயன்படுத்துவதையும் ஒரு சில போலீசார் தவிர்க்க தொடங்கி உள்ளனர்.

இன்னும் ஒரு சில போலீசாரோ எதற்கு வீண் வம்பு? என்று தனது குடும்பத்தினருடன் மட்டுமே செல்போனை பயன்படுத்தும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ‘வாட்ஸ்–அப்’ ஏற்படுத்தும் ‘கிலி’ காரணமாக ‘லேண்ட்–லைன்’ போன், (தரை வழி இணைப்பு) ‘வாக்கி–டாக்கி’ மூலமே பெரும்பாலான போலீசார் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். மிகவும் முக்கியமான தகவல் என்றால் நேரிலேயே சந்தித்து பேசிக் கொள்கிறார்கள்.

யாராவது செல்போனில் தொடர்பு கொண்டாலும், எங்கே இந்த பேச்சு ‘டேப்’ செய்யப்படுகிறதோ? என்ற பயத்தில் நேரிலே வரச் சொல்வதும் இப்போது வழக்கமாகி கொண்டு இருக்கிறது.

திருநங்கையின், ஆபாச அர்ச்சனை

‘வாட்ஸ்–அப்’பில் தினம், தினம் ஒரு ரகசிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், தற்போது திருநங்கை ஒருவர், போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரை நடுரோட்டில் வைத்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் வீடியோ காட்சி ஒன்று ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள சிக்னலில் பதிவு செய்யப்பட்டுள்ளது போல் அமைந்துள்ள அந்த வீடியோ காட்சியில், ‘மொபட் வண்டியில் வரும் இரண்டு திருநங்கைகளை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். அப்போது மொபட் வண்டியின் பின்புறம் அமர்ந்திருந்த திருநங்கை எதற்கு டா? நிறுத்துகிறாய் என்று தரக்குறைவான வார்த்தைகளாலும், ஆபாச வார்த்தைகளாலும் போக்குவரத்து போலீஸ்காரரை சரமாரியாக திட்டுகிறார்.

பின்னர் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பால் அடிப்பேண்டா என்று செருப்பையும் கழற்றுகிறார். போக்குவரத்து போலீஸ்காரருக்கு ஆதரவாக சக போக்குவரத்து போலீஸ்காரர்கள் வருகிறார்கள். ஆனாலும் திருநங்கை தொடர்ந்து ஆவேசம் தணியாமலே இருக்கிறார். பின்னர் ஒருவழியாக தனக்கு தானே சமாதானமடைந்த திருநங்கை சர்வ சாதாரணமாக திரும்பி செல்கிறார். கடைசிவரை போலீசார் அந்த திருநங்கை மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் இந்த காட்சியை பார்த்து செல்கிறார்கள்.

இவ்வாறு அந்த வீடியோ காட்சி அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...