Friday, June 30, 2017

ஜி.எஸ்.டி., வரி நாளை முதல் அமலாகிறது... புதிய சகாப்தம்! வரவேற்க தொழில் துறையினர் ஆயத்தம்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
01:07




திருப்பூர் : எளிமையான வரி நடைமுறையுடன் கூடிய, ஜி.எஸ்.டி., நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதை வரவேற்க, திருப்பூர் தொழில் துறையினர் ஆயத்தமாக உள்ளனர்.

மன்னர் ஆட்சி காலத்தில் துவங்கி, இன்றைய மக்களாட்சி வரை நீடிக்கிறது, வரி விதிப்பு நடைமுறை. மக்களின் நல திட்டங்கள் வகுக்கவும், அரசு இயந்திரத்தை திறம்பட இயக்கவும், வரி வருவாய் மிக அவசியமானதாக உள்ளது. நமது நாடு அன்னியர் வசம் இருந்த போது, ஒரு பொருளை உற்பத்தி செய்யும் இடத்திலேயே வரி விதிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது; இதுவே, கலால் வரி.சுதந்திரத்துக்கு பின்னும், அரசுக்கு வருவாய் தேவைப்பட்டதால், கலால் வரி தொடர்ந்தது. ஒரு பொருள் மீது கலால் வரி விதிக்கப்பட்டால், அந்த துறையினர் அஞ்சி நடுங்குவர்; அந்தளவு, கடுமையானதாகவே கலால் வரி பார்க்கப்படுகிறது. இதுதவிர, மாநில அரசுகள் விற்பனை வரி, நுழைவு வரி என, எண்ணற்ற வரியினங்களை விதிக்கின்றன.பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில், பல ஆண்டுகளுக்கு முன்னரே, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வந்துவிட்டன; 140 நாடுகள், ஒரே நாடு; ஒரே வரி என்ற கொள்கையை கடைபிடித்து வருகின்றன. நீண்ட போராட்டத்துக்குப் பின், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நமது நாட்டில், ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை என்ற கோட்பாட்டுடன், வரியினங்களையெல்லாம் ஒருங்கிணைத்து, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.,) கொண்டு வந்துள்ளது.

மத்திய, மாநில வரியினங்களெல்லாம், இதனுள் அடங்கிவிடும். ஜி.எஸ்.டி., என அழைக்கப்பட்டாலும்கூட, சி.ஜி.எஸ்.டி.,- எஸ்.ஜி.எஸ்.டி., வெளிமாநில வர்த்தகம், இறக்குமதியின் போது ஐ.ஜி.எஸ்.டி., என மூன்று முகங்களை, இது கொண்டுள்ளது. ஜி.எஸ்.டி., இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதால், கலால், வணிக வரி போன்ற பழைய வரி நடைமுறைகள், இன்றிரவோடு காலாவதியாகின்றன; நள்ளிரவு, 12:00 மணி முதல், ஜி.எஸ்.டி., வரி நடைமுறைக்கு வந்துவிடுகிறது.
சிகப்பு கம்பள வரவேற்புமத்திய அரசின் வரி சீர்திருத்த நடவடிக்கையை, திருப்பூர், கோவை பகுதி தொழில்துறையினர், வர்த்தகர்கள், உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட, புரியாத சட்ட நுணுக்கங்கள், சிக்கலான நடைமுறைகளை கொண்ட கலால் வரியின் ஆயுள் இன்றோடு நிறைவடைகிறது; இதுவே, தொழில் துறையினரின் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணமாகும்.வெளிப்படை தன்மை உள்ளதால், மிக எளிதாக ஜி.எஸ்.டி., விதிமுறைகள், நடைமுறைகளை அறிந்து, பின்பற்றமுடியும். வரிக்கு வரி என்கிற நிலை ஒழிவதால், வரிச்சுமை குறைந்துவிடும். செலுத்திய வரியில், உள்ளீட்டு வரி வரவு கிடைக்கும் என்பது, வர்த்தகர்களுக்கு இனிமை சேர்க்கின்றன. வரி குறைவதால், பொருட்கள் விலை குறைந்து, நுகர்வோரும் பயனடைவர்.ஜி.எஸ்.டி., வருகையால், புதிய ரசீது புத்தகம் தயாரிப்பு, கையிருப்பு பொருட்கள் விவர பட்டியல் தயாரிப்பு பணிகளில் தொழில் துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆயத்த ஆடை துறைக்கான வரி விதிப்பில், சில சிக்கல்கள் இருந்தாலும், தங்களது கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு நிச்சயம் நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கையும், தொழில்துறையினருக்கு பிறந்துள்ளது.

ஜி.எஸ்.டி., ஒரு நிவாரணிஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:பழைய வரி முறைப்படி, உற்பத்திக்கு கலால் வரி, இறக்குமதிக்கு சுங்கம்; சேவை வரி, விற்பனை வரி, நுழைவு, பொழுதுபோக்கு வரி, அனைத்து வரிக்கும் பொருந்தும் சர்சார்ஜ் வரி, செஸ் வரிகள் உள்ளன. இவற்றில், இறக்குமதிக்கான சுங்க வரி தவிர, அனைத்து வரிகளும் ஜி.எஸ்.டி.,க்குள் வந்து விடுகின்றன. தற்போதைய கலால் வரி சட்டம், மிகவும் சிக்கலானது.ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.,யில், கணினி மயமாக்கப்பட்ட வரைமுறை மூலம், மிக எளிதாக வரி நடைமுறைகளை கடைபிடிக்க முடியும். அதிகாரிகள் தலையீடு குறைந்து, அனைவரும் தாமாக வரி சட்டத்தின்படி, தொழில் செய்வது சுலபமாகிவிடும். அவர்களிடம் இருந்து சிரமமுமின்றி, அரசு வரி வசூலிக்கும். கடந்த கால வரிகளால் உருவான வலிக்கு, நிவாரணியாக ஜி.எஸ்.டி., வந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
"செல்பி'க்கு ஆர்வம்ஜி.எஸ்.டி.,க்கு, தொழில் துறையினர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். முதல்முறை தாங்கள் வழங்கும் பொருட்கள், வாங்கும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., ரசீதுடன், செல்பி எடுத்து, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக தளங்களில் பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளனர். அதேபோல், கலால் வரியும் தனது பயணத்தை முடிக்கிறது. எனவே, வர்த்தகர்கள், தொழில் துறையினர், தாங்கள் வழங்கும் கலால் வரி அடங்கிய கடைசி ரசீதுகளுடனும் கூட, செல்பி எடுத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...