Monday, October 2, 2017

சார் - பதிவாளர் அலுவலகங்களில் வெளி ஆட்கள் பணியாற்ற தடை
பதிவு செய்த நாள்01அக்
2017
23:46

'சார் - பதிவாளர் அலுவலகங்களில் வெளி ஆட்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, வெளியாட்களை பணியில் ஈடுபடுத்தினால், பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, பதிவுத்துறை, ஐ.ஜி., குமரகுருபரன் எச்சரித்துஉள்ளார்.

தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிக்காக, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், பத்திரங்களை பதிய, பொது மக்கள் நேரடியாக அணுக முடியாத சூழல் நிலவுகிறது. மிக சரியாக பத்திரங்களை தயாரித்து சென்றாலும், சார் - பதிவாளர்கள் ஏற்பதில்லை.
தங்களுக்கு வேண்டிய, ஆவண எழுத்தர் வாயிலாக சென்றால் மட்டுமே ஏற்கின்றனர்.

பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள், சொந்தமாக சம்பளம் கொடுத்து, வெளி ஆட்களை பணியில் அமர்த்தி உள்ளனர். இது, லஞ்ச ஊழலுக்கே வழிவகுக்கும் என, பொது மக்கள் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன், அனைத்து, டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: 

 சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளி ஆட்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது. சுற்றறிக்கையின் இணைப்பாக அனுப்பப்பட்டுள்ள சான்று படிவத்தில், 'எங்கள் அலுவலகத்தில், வெளி ஆட்கள் யாரும் பணியில் இல்லை' என, சார் - பதிவாளர்கள், எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்து, தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும்

 வெளி ஆட்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சார் - பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: இந்த சுற்றறிக்கையின் வாயிலாக, சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளி ஆட்கள் பணியில் இருப்பதை, ஐ.ஜி., ஒப்புக்கொள்கிறார். பல்வேறு சார் - பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிய வேண்டியவர்களை, அயல் பணி என, தலைமையகத்திலேயே வைத்துக் கொள்கின்றனர். இதனால், ஏற்படும் காலியிடம், அதற்கான பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாட்டையும், ஐ.ஜி.,யே சுட்டிக்காட்டினால் நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024