Monday, October 2, 2017

தீபாவளி பட்டாசு சீட்டு நடத்துபவர்களுக்கு வருமா... கிடுக்கிப்பிடி? ஊரறிந்த ரகசியம் வருவாய் துறைக்கு தெரியாதாம்

பதிவு செய்த நாள்02அக்
2017
00:31




தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பட்டாசு சீட்டு நடத்துபவர்கள், அதற்கான பரிசு பொருட்களுடன் பட்டாசு பெட்டிகளை இருப்பு வைக்க துவங்கி விட்டனர். உரிய பாதுகாப்பு இன்றி, வீடுகளில் பெருமளவில் அடுக்கி வைக்கப்படும் பட்டாசு பெட்டிகளால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர்கள் செயலில் இறங்கினால், இதை, கட்டுப்படுத்த முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ராக்கெட் வேகத்தில் உயரும் பட்டாசு விலையால், நடுத்தர வர்க்கத்தினர், தீபாவளி பண்டிகையில் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி கொடுக்க திணறுகின்றனர்.இந்த சூழலை சாதகமாக்கி கொண்ட நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் சீட்டு நிறுவனங்கள் பகுதிவாசிகளிடம் தீபாவளி பட்டாசு சீட்டு நடத்தி, பணம் வசூலித்து வருகின்றன.

கொள்ளை லாபம்வசூலாகும் பணத்தை தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். லாபத்தின் ஒரு சொற்ப தொகையுடன், சீட்டு சேர்ந்தவர்களுக்கு, தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு பெட்டிகளை வழங்கி வருகின்றன. இந்த பட்டாசு சீட்டில், கொள்ளை லாபம் கிடைப்பதால், புற்றீசலாக ஏராளமானோர் பட்டாசு சீட்டு நடத்துவதில் இறங்கியுள்ளனர்.போட்டி காரணமாக, பட்டாசு பெட்டிகளுடன் பரிசு பொருட்களாக, இனிப்பு, பித்தளை சாமான்கள், தங்க நகைகள் என, நீளும் பட்டியலில், தற்போது ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களும் இடம் பிடித்துள்ளன.

மாதந்தோறும் பணத்தை செலுத்துவதன் மூலம், சமையல் எண்ணெய் முதல், பலகாரம் வரை பட்டாசு உட்பட ஒரு மாத்திற்கான மளிகை சாமான்களும் கிடைப்பதால், தீபாவளிக்கு போன்ஸ் கிடைக்காத கூலி தொழிலாளியும், பண்டிகையை கோலாகலமாக கொண்டாட முடிகிறது.தன் வீட்டு குழந்தைகள், அடுத்த வீட்டு குழந்தைகள் கொளுத்தும் வாண வேடிக்கையை பரிதாபமாக பார்த்து ஏங்கும் நிலை இன்றி, கவுரவமாக பட்டாசுகளை தன் வீட்டு வாசலில் வெடித்து மகிழ்கின்றனர். இந்த மகிழ்ச்சியே, பட்டாசு சீட்டு நடத்துபவர்களின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது.

இதனால், சீட்டு நடத்துபவர்களுக்கும், சீட்டு சேர்பவர்களுக்கும் என, இருதரப்பிலும் மகிழ்ச்சி தான். ஆனால், பட்டாசு பெட்டிகளை சிவகாசியில் இருந்து, மொத்தமாக வங்கி வந்து, குடியிருப்புகளுக்கு மத்தியில், வீடுகளில் இருப்பு வைக்கும் சீட்டு கம்பெனிகளால், அருகில் குடியிருப்பவர்கள் தான் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

நடவடிக்கை தேவைகுறைந்தபட்சம், 500 பெட்டிகள் வரையிலான பட்டாசுகளை இருப்பு வைக்கும் இடத்தில், உரிய பாதுகாப்பு அம்சங்களை இவர்கள் கடைப்பிடிப்பது இல்லை. பட்டாசு கடைகளை வைப்பவர்கள் வருவாய் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்பது விதிமுறை.பட்டாசு கடைகளை விட அதிகளவில் வியாபாரம் நடத்தும், இந்த சீட்டு நிறுவனங்கள் ரகசியமாக இருப்பு வைக்கும் பட்டாசுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.
கிராமங்கள் தோறும் தங்கியிருந்து பணியாற்றும் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியார்களுக்கு, பட்டாசு சீட்டு நடத்துபவர்கள் யார் என்பதும், அவர்கள் இருப்பு வைக்கும் இடமும் தெரியாமல் போக வாய்ப்பு இல்லை.வருவாய் துறையினரும், போலீசாரும் உரிய முறையில் இவர்களை கண்டறிந்து, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். பெரும் விபரீதம் ஏற்படும் முன்பாக நடவடிக்கை தேவை என்பது சமூகஆர்வலர்களை எதிர்பார்ப்பாக உள்ளது.

பட்டாசு கடைகள் வைப்பவர்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து, அதற்கேற்ப பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருந்தால் மட்டுமே, அவர்களுக்கு இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் உரிமம் வழங்கப்படும். ஆனால், விதிகளை மீறி பட்டாசு இருப்பு மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீடுகளில் வைத்து பட்டாசு வினியோகம் செய்பவர்கள் குறித்து, இதுவரை எந்த புகாரும் வரவில்லை.-என்.ஜெயராமன், திருத்தணி கோட்டாட்சியர்

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024