Tuesday, October 3, 2017

விடுமுறை ஜாலிதான் ஆனால் பயணம்தான் கொடுமை:புலம்பி தள்ளும் குமரி மாவட்ட மக்கள்

பதிவு செய்த நாள்02அக்
2017
19:41

நாகர்கோவில்: விடுமுறை வந்தால் ஊருக்கு வருவது ஜாலிதான், ஆனால் ஊருக்கு வருவதும், திரும்பி செல்வதும்தான் கொடுமையாக உள்ளது என்று குமரி மாவட்ட பயணிகள் புலம்புகின்றனர்.

தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள குமரி மாவட்ட மக்கள் படிப்பு, வேலைக்காக சென்னையில் அதிக அளவில் தங்குகின்றனர். இது போல கோவை, திருச்சியிலும் வசிக்கின்றனர். மேலும் மருத்துவம், இஞ்ஜினியரிங் படிப்புக்காக மாணவ மாணவிகள் தமிழகம் முழுவதும் பரவி கிடக்கின்றனர் விடுமுறை என்றாலே சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் வரும் போதும், திருப்பி செல்லும் போதும் போதுமான பயண வசதி இல்லாததால் பயணம் மிகவும் கொடுமையாக உள்ளது என்று பயணிகள் ஆதங்கப்படுகின்றனர்,
ரயில் என்றால் சென்னை செல்ல கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் மட்டுமே உள்ளது. பகல் நேர ரயிலாக குருவாயூர் சென்னை ரயில் உள்ளது. அடுத்து பயணிகள் முக்கியமாக நம்பியிருப்பது ஆம்னி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களைதான். ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகம். அரசு பஸ்களில் பயண நேரம் அதிகம். ரயிலில் இடம் கிடைப்பது மிகவும் சிரமம். இதனால் சிரமப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.

காலாண்டு விடுமுறையுடன் 4 நாள் அரசு விடுமுறை இணைந்து வந்ததால் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தங்கியிருந்தவர்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நேற்றும், நேற்று முன்தினமும் இவர்கள் திரும்பி சென்றனர். இதனால் பஸ்ஸ்டாண்டுகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமான பஸ்களுடன், 112 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. எனினும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

நாகர்கோவில் ரயில் நிலையம் திருவனந்தபுரம் மண்டலத்தில் உள்ளதால் அங்குள்ள அதிகாரிகள் குமரி மாவட்ட மக்களின் தேவை பற்றி தெரிந்து கொள்வதில்லை. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்கப்படாமல் உள்ளது. கூடுதல் ரயி்லகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024