Friday, October 6, 2017

ஸ்டிரைக்கில் குதிக்க போவதாக அரசுக்கு வங்கி ஊழியர்கள் மிரட்டல்

05அக்
2017 
14:41
புதுடில்லி : கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி உயர் மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மக்கள், தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை அருகில் உள்ள வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் வங்கி ஊழியர்களின் பணிச்சுமை அதிகமானது. பலரும் நாள் ஒன்றிற்கு 14 மணி நேரம் வரை பணிசெய்யும் நிலை ஏற்பட்டது. வேலை நெருக்கடி கருதி பலரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பின் போது கூடுதலாக பணியாற்றிய வங்கி ஊழியர்களுக்கு, கூடுதல் பணிக்கான சம்பளம் இதவரை வழங்கப்படவில்லை. ஏறக்குறைய 11 மாதங்கள் கடந்த பிறகும், அரசிடம் பலமுறை வலியுறுத்திலும் பணியாற்றிய கூடுதல் நேரத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை.

ஊழியர்கள் ஒருவருக்கு அவர் கூடுதலாக பணியாற்றும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 முதல் ரூ.300 வரை வழங்கப்பட வேண்டும். நிலுவை தொகை வழங்கப்படாதது தொடர்பாக மத்திய அரசுக்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக நிலுவை தொகையை தர நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் அல்லது சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வோம் எனவும் வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024