Friday, October 6, 2017


சி.பி.ஐ., விசாரணைக்கு லாலு ஆஜரானார்

பதிவு செய்த நாள்06அக்
2017
00:29




புதுடில்லி: ரயில்வே அமைச்சராக இருந்தபோது, மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், சி.பி.ஐ., விசாரணைக்கு ஆஜரானார்; அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.

லாலு பிரசாத், 2006ல், காங்கிரஸ் கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயின் துணை அமைப்பான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இரண்டு ஓட்டல்களை நடத்தும் உரிமம், ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அதற்கு பிரதிபலனாக, பீஹாரின் பாட்னா நகரில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி நிறுவனம் மூலம், லாலு குடும்பத்தினர் பெற்று உள்ளதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக, லாலு மற்றும் அவரது மனைவி ரப்ரி தேவி, மகனும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி, மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்தி உள்ளிட்டோரிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்திஉள்ளது.

பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையும் நடந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும் படி, சி.பி.ஐ., 'சம்மன்' அனுப்பியிருந்தது. அதன்படி, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், லாலு பிரசாத் நேற்று ஆஜரானார். அவரிடம், அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024