Friday, October 6, 2017

மதுரை மீனாட்சி கோயிலில் வெள்ளம் புகுந்தது எப்படி 16 மி.மீ., மழையை தாங்காத வடிகால்; கண்காணிப்பில் அலட்சியம்

பதிவு செய்த நாள்06அக்
2017
00:41

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் பெய்த மழையில், ரோட்டில் சென்ற தண்ணீர் கோயிலுக்குள் பெருக்கெடுத்து ஓடியது.

பிரமிப்பைத் தரும் கட்டடக்கலையின் சான்றாக காட்சிதரும் இக்கோயில், இயற்கையின் சீற்றங்களை தாங்கும் தொழில் நுட்பங்களோடு நம் முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே செல்லும் மழை நீர், ஒரு சில நிமிடங்களில் வடிந்துவிடும். அந்த அளவிற்கு அதன் கட்டமைப்புகள் இன்றும் ஆச்சரியம் தரும்.

தொடர் பாதிப்பு

கோயிலை சுற்றிலும் கட்டடங்கள் அதற்கு வசதியாக ரோடுகள் எல்லாம் அமைக்கப்பட்டு, காலப்போக்கில் ரோடு மட்டத்தை விட கோயில் தாழ்வாக மாறிவிட்டது. இதனால் சிறு மழை பெய்தால் கூட தண்ணீர், கோயிலுக்கு வரும் நிலை உள்ளது. குறிப்பாக கிழக்கு, தெற்கு கோபுரப் பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

கீழ ஆவணி மூலவீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதியில் உள்ள தண்ணீர் எல்லாம் இந்த பகுதியில் சேகரமாகிறது. இந்த தண்ணீர் கோயிலுக்குள் வராமல் தடுப்பதற்கு , பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெருமழை பெய்கின்ற போது இந்த தண்ணீரை தடுக்க முடியாமல் போய்விடுகிறது.

2004ம் ஆண்டிற்கு பின் நேற்று முன்தினம் தான், அதிகமாக இங்கு மழை தண்ணீர் புகுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டு போதிய மழை பெய்யாத நிலையில் கடந்த மாதம், இப்பகுதியில் பெய்த ஒரு மணி நேர மழையிலும் தண்ணீர் கோயிலுக்குள் புகுந்துள்ளது.

கண்காணிப்பில் அலட்சியம்

சித்திரை வீதிகளை சுற்றிலும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர் வடிகால்கள் அனைத்தும் முறையாக பராமரிப்பு இல்லாதது தண்ணீர் தேங்க முக்கிய காரணம். இந்த கால்வாய்களில் ஏற்பட்டும் அடைப்புகள் முறையாக அகற்றப்படவில்லை. இதில் மாநகராட்சி முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை. இந்த மழை நீர்வடிகால்கள் அடைப்பு ஏற்படுவதற்கு பொதுமக்கள், ஓட்டல், லாட்ஜ் ஊழியர்களின் அலட்சிய போக்கும் முக்கியமானது.

மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிய தெருக்களில் குப்பைகள் போடுவதற்கு குப்பைத் தொட்டிகள் தனியாக வைத்திருந்தாலும், மழை நீர் கால்வாயில் குப்பைகள் கொட்டும் பழக்கம் இன்னும் மாறவில்லை. இதன் பாதிப்பால் தான் இப்போதும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த பகுதியில் மழைநீர் ஓடைகள் கட்டமைப்பு முழுமையாக இணைக்கப்படாமல் ஆங்காங்கே அரைகுறையாக இணைப்புகள் உள்ளது. இந்த பணியை மாநகராட்சி இன்னமும் முழுமையாக முடிக்கவில்லை.

ஆடிவீதியின் நிலை என்ன

சித்திரை வீதிகள் உயரமாக இருப்பதால் மழை பெய்தால் தண்ணீர் ஆடி வீதிக்குள் வருகிறது. ஆடி வீதியில் இந்த தண்ணீரை வெளியேற்றும் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை. இரண்டு இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளன. இங்கு தேங்கும் தண்ணீர்
சுத்திகரிக்கப்பட்டு தெப்பக் குளத்தில் சேரும். மழை குறைவால் இந்த மழைநீர் சேகரிப்பு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. 2003ம் ஆண்டில் இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் வழியாக நல்ல தண்ணீர் தெப்பத்தில் செல்லும் வகையிலும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

யானை மகால் அருகில், மழை நீரை வெளியேற்றி மழைநீர் வாய்க்காலில் சேர்க்கும் கட்டமைப்பு உள்ளது. இந்த ஒரு இடத்தில் இருந்து தான் ஆடிவீதியில் சேரும் தண்ணீர் வெளியேறுகிறது. ஆனால் இந்த கால்வாயின் வெளிப்பகுதியில் ஏற்படும் அடைப்பால் வெளியில் உள்ள தண்ணீர் ஆடிவீதிக்கு ஆறாக வந்துவிடுகிறது. இந்த பகுதியில் ஒன்றரை அடி தண்ணீர் தேங்கினால் கோயிலுக்குள் தண்ணீர் பாய்ந்து விடும்.

சுகாதாரம் பாதிக்குமா

கோயிலுக்கான பாதுகாப்புகள் நாளுக்குநான் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது. அதே போன்று சுகாதாரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் புனிதத்துவம் வாய்ந்த இடங்களில் முதன்மையானதாக இக்கோயில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டது, துாய்மையின் அடிப்படையில் தான். ஆனால் இங்கு ரோட்டில் உள்ள தண்ணீர் உள்ளே புகுந்துவிடுவது என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கோயிலின் உள்ளே காற்று, ஒளி வருவதற்கு ஏற்ப பல இடங்களில் திறந்த தாழ்வாரங்கள் உள்ளன. அதிகமாக மழை பெய்யும் போது இதன் வழியாகவும் தண்ணீர் கோயிலுக்குள் வரும். ஆனால் இந்த தண்ணீர் ஒரு சில நிமிடங்களில் வெளியேறும் வகையில் தரையில் கல் மூடிகள் கொண்ட கால்வாய் கட்டமைப்பை அக்காலத்திலேயே அமைத்திருக்கிறார்கள். அதன் வழியாகத்தான் இப்போதும் கோயிலுக்குள் புகுந்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டுள்ளது.

தண்ணீரை வெளியேற்றுவதற்கான பம்பிங் வசதிகளும் இங்கு உள்ளன. மழையின் போக்கையும், வெள்ளத்தின் வேகத்தையும் கண்காணித்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் சற்று தாமதமாக நடந்துள்ளதால், இரண்டு மணி நேரம் கோயில் வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது.

முன்னெச்சரிக்கை அவசியம்

அம்மன் சன்னதிக்கு செல்லும் நுழைவு வாயிலை கடந்ததும் வரும் இருட்டு மண்டபத்தில் மின்இணைப்புகளின் கன்ட்ரோல் பேனல் உள்ளது. மழை வெள்ளத்தில் இதன் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கி நின்றுள்ளது. இதன் பாதுகாப்புகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். வெள்ளம் புகுந்த நேரத்திலும் கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்துள்ளனர்.

மழை தொடர்ந்த போது கோயில் இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்பட்டதால் , தண்ணீரை விரைவாக வெளியேற்ற முடிந்தது. இதே பணியை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டிருந்தால்
வெள்ளத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கலாம். வெறும் 16 மி.மீ., மழை பெய்ததற்கே இந்த பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொடர்ந்து மழைக்காலங்கள் வரஉள்ளது. இந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களை சுத்தப்படுத்தும் பணியை மாநகராட்சி எடுக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் விடிவு வருமா

மீனாட்சி அம்மன் கோயில் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளதால் இங்கு 200 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் எந்த காரணத்தை முன்னிட்டும் ரோட்டில் உயரம் இன்னும் அதிகரிக்காமல் பணிகளை மாநகராட்சி நடத்த வேண்டும். சித்திரை வீதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளின் தண்ணீர் ஆடிவீதிக்குள் வராத கட்டமைப்புகளை இப்போதே மாநகராட்சி திட்டமிட வேண்டும். இதற்காக கட்டுமான கலையின் வல்லுனர்களை கொண்ட குழுவினர் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோயில் புனித்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்த இனி தொலைநோக்கு திட்டங்கள் தான் அவசியம். தற்காலிக அல்லது அவசரகால திட்டங்கள் தீர்வுகளைத்தராது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024