ஒரிஜினல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும் வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி: வாடிக்கையாளர்கள் அளித்த ஆவணங்களின் நகல்களை, சட்ட விரோத பணப்பரிமாற்றங்களை தடுக்கும் நோக்கில், ஒரிஜினல் ஆவணங்களுடன் ஒப்பிட்டு உறுதி செய்து, அதை பதிவு செய்யும் பணியில், வங்கிகள் ஈடுபட உள்ளன.
குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக, பணப் பரிவர்த்தனை செய்பவர்கள், ஆவணங்களின் நகல்களை, வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் போலிகளை தடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும், வருவாய் துறை, சமீபத்தில், அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு, உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியது.சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் நோக்கில் அனுப்பப் பட்ட அந்த கடிதத்தில், அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் நகல்களை, ஒரிஜினல் ஆவணங்களுடன் சரி பார்த்து, அதனை பதிவு செய்யும்படி கூறப்பட்டு உள்ளது.
வங்கிகளில், கணக்கு துவங்கும் வாடிக்கையாள ரிடம், ஆதார் அடையாள எண், இருப்பிடச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்படுகின்றன. அதேபோல், 50 ஆயிரம் ரூபாய்க்கு கூடுதலாக பரிவர்த்தனை செய்பவர் களிடம், இத்தகைய ஆவணங்களின் நகல்கள் பெறப்படுகின்றன. இனி, இந்த ஆவண நகல்கள் அனைத்தையும், ஒரிஜினல் ஆவணங்களுடன், வங்கிகள், நிதி நிறுவனங்கள் சரிபார்க்கவேண்டும்.
அதேபோன்று, 10 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக பணப்பரிவர்த்தனை செய்பவர்கள், சந்தேகத்திற் கிடமான பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் தொடர்பான தகவல்களை, எப்.ஐ.யு., - இண்ட் எனப்படும், இந்திய நிதி புலனாய்வு பிரிவிடம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் சமர்ப்பிக்கும்படி
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பங்குசந்தை தரகர்கள், சிட்பண்ட் நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆவணம் சமர்ப்பிக்கும் வாடிக்கையாளரிடம், சமீபத்திய முகவரி சான்று இல்லாத பட்சத்தில், மின் வாரிய பில், தொலைபேசி, 'மொபைல் போன் போஸ்ட் பெய்ட்' பில், குடிநீர் வாரிய பில் போன்றவற்றை ஆவணமாக காட்டலாம்.
No comments:
Post a Comment