Wednesday, October 4, 2017

'சேமிப்புக்கு அதிக வட்டி தரும் சிறிய வங்கிகள்'

செ.சல்மான்


தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் அவர்களுடன் போட்டிபோடும் தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கு, வைப்பு நிதிக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி வழங்கிக்கொண்டிருக்கும் சூழலில், புதிதாக வந்துள்ள பேமென்ட் வங்கிகள் அதிகமான வட்டி வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.

தேசிய வங்கிகளும், பெரிய தனியார் வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு 4 சதவிகிதமே வட்டி வழங்குகின்றன. அதிலும் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. வைப்பு நிதிக்கு 6 முதல் 7 சதவிகிதத்துக்குள்தான் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வகை கணக்குகளை அவசரத்துக்கு முடித்துக்கொள்ள முடியாது. வைப்பு நிதியில் கடன் வாங்கினால், 12 சதவிகிதம் வட்டி வசூல் செய்கிறார்கள். மக்களின் சூழ்நிலையை அறிந்து அதிக வட்டி தருவதாகச் சில போலி நிதி நிறுவனங்கள் மொத்தமாகச் சுருட்டிக்கொண்டு ஓடுகின்றனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி அனுமதியுடன் புதிதாகச் செயல்படத்தொடங்கியுள்ள பேமென்ட் வங்கிகளான பந்தன் வங்கி, ஆர்.பி.எல் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு 6 சதவிகித வட்டி அளிக்கின்றன. கோடக், யெஸ் வங்கி போன்றவை தங்களுடைய பலவிதமான சேமிப்புக் கணக்குகளுக்கு 6 முதல் 7 சதவிகிதம் வரை வட்டி தருவதாக அறிவித்துள்ளன. சூரியோதை வங்கி, ஒரு லட்சம் வரை நிர்வகிக்கும் சேமிப்புக் கணக்குக்கு 6.25 சதவிகிதமும், அதற்கு மேலான சேமிப்புக் கணக்குகளுக்கு 7.25 சதவிகிதமும் தருகிறது. மற்ற வங்கிகள் டெபாசிட்டுகளுக்குத் தரும் வட்டியைவிட அதிகமாகச் சேமிப்புக் கணக்குகளுக்கு இந்தப் புதிய வங்கிகள் தருகின்றன. இதனால், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பேமென்ட் வங்கிகளில் கணக்குத் தொடங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024