குவியும் 10 ரூபாய் நாணயங்கள்: வங்கி ஊழியர்கள் தவிப்பு
: நவ 11, 2017 01:24 |
புனே: மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், மலை போல் குவிந்துள்ள, 10 ரூபாய் நாணயங்களை பாதுகாக்க முடியாமல், ஊழியர்கள் தவிக்கின்றனர்.
கடந்த, 2005ல், 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின், 2011ல், சில மாற்றங்களை செய்து, புதிய வடிவில், 10 ரூபாய் நாணயங்களை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது; 5,200 கோடி ரூபாய் மதிப்பில், 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன.
இந்நிலையில், சமூக வலைதளம் மூலம், புதிய, 10 ரூபாய் நாணயம் குறித்து தவறான வதந்தி பரவியது. பழைய மற்றும் புதிய நாணயங்களில் இருந்த வேறுபாட்டை தவறாக புரிந்து கொண்ட மக்கள், போலி நாணயமாக கருதி வாங்க மறுத்தனர். வியாபாரிகளும், இந்த நாணயங்களை வாங்க மறுத்ததால், மக்கள் தங்களிடம் இருந்த, 10 ரூபாய் நாணயங்களை, வங்கிகளில் டிபாசிட் செய்தனர். புனே மாவட்ட, கூட்டுறவு வங்கி பெட்டகம், 10 ரூபாய் நாணயங்களால் நிரம்பி வழிவதால், ஊழியர்கள் தத்தளிக்கின்றனர்.
வங்கிகளில், 10 ரூபாய் நாணயங்கள் அதிகளவில் 'டிபாசிட்' செய்யப்படுவதாகவும், இந்த நாணயங்களை பெற்றுக் கொள்ள, வாடிக்கையாளர்கள் முன்வருவதில்லை எனவும், இவற்றை என்ன செய்வதென தெரியாமல், வங்கிகள் தவிக்கின்றன எனவும் புனே கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment