செல்லாததாக அறிவிக்கப்பட்டும் புழக்கத்தில் இருக்கும் பாஸ்போர்ட்கள்
Added : நவ 20, 2017 23:37
புதுடில்லி: கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் செல்லாது என அறிவிக்கப்பட்டு, இரண்டாண்டுகளாகியும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவை புழக்கத்தில் உள்ளன.
பாஸ்போர்ட்கள், கைகளால் எழுதப்பட்டு வழங்கப்பட்டன. இந்த நடைமுறை, 2001ல் நிறுத்தப்பட்டது. அதன்பின், பாஸ்போர்ட்டில் தகவல்கள் அனைத்தும் அச்சடிக்கப்பட்டு, வழங்கப்படுகின்றன. இதற்கிடையே, சர்வதேச விமான போக்குவரத்து ஆணையம், கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை மாற்ற வேண்டும் என, உத்தரவிட்டது.
அதன்படி, 2015 நவம்பர், 25க்குள் அனைத்து நாடுகளிலும், கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் பயன்பாட்டில் இருக்கக் கூடாது. ஆனால், தற்போதும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட, கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் புழக்கத்தில் இருப்பதாக, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2001 வரை, கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில், 1997 முதல், 2000ம் வரை வழங்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கைகளால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்கள் தற்போதும் புழக்கத்தில் உள்ளன. இந்த பாஸ்போர்ட்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், பாஸ்போர்ட்களை மாற்றிக் கொள்ளும்படி, பல முறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைவருக்கும் புதிய பாஸ்போர்ட் வழங்க, அரசு தயாராக உள்ளது. அதனால், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட் உள்ளவர்கள், உடனடியாக அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment