Sunday, October 26, 2014

திரையுலகின் மணி மகுடம் லட்சிய நடிகர்

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இன்று காலமானார்.  முந்தைய தமிழ்த்திரையுலகின் ரத்தினங்களில் ஒருவர் ராஜேந்திரன்.
எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகளுக்கிடையே தன் தனிப்பட்ட நடிப்பால் பெரும் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர். மதுரை அடுத்த உசிலம்பட்டியில் சூரியநாராயண தேவருக்கும் ஆதிலட்சுமிக்கும் 1928ஆம் வருடம் பிறந்தார்.

கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தைக்கு அவரை அரசு பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் சிறுவன் எஸ்.எஸ்.ஆருக்கோ நாடகங்களின் மீது தணியாத ஆசை. விளைவு  தனது 6 வயதில் நாடகங்களில நடிக்கத் துவங்கினார். தென்னிந்தியாவின் சிறந்த நாடக கலைக்கூடமாக திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பின் தன் தனிப்பட்ட குரல்வளத்தால் வெகுசீக்கிரத்தில் 'பால அபிமன்யு' என்ற வேடத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தன் திறமையை வளர்த்துக் கொண்டார். பின்னர் அதிலிருந்து விலகி நாடக உலகின் புதுமைகளை புகுத்திவந்த அப்போதைய பிரபல டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக மன்றத்தில் இணைந்தார். பின்னர் நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு நுழைந்தார்.

சிவாஜிகணேசனின் முதல்படமான 'பராசக்தி'தான் இவருக்கும் முதல் படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்தில் ராஜேந்திரனுக்கு நாயகன் சிவாஜிக்கு தம்பி வேடம் தரப்பட்டது. தெள்ளிய தமிழில் கணீர் குரலோடு குணசேகரன் என்ற பாத்திரத்தில் இவரின் நடிப்பு சிவாஜிக்கு அடுத்தபடியாக  யார் இந்த நடிகன் என்று ரசிகர்களால் பேசப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார் எஸ்.எஸ். ஆர். 'முதலாளி', 'தலைகொடுத்தான் தம்பி',  'எதையும் தாங்கும் இதயம்', 'குமுதம்', 'ரத்தக்கண்ணீர்', 'கை கொடுத்த தெய்வம்', 'பச்சை விளக்கு', 'குலதெய்வம்', 'தை பிறந்தால் வழிபிறக்கும்', 'தெய்வப்பிறவி', ராஜாராணி', 'காஞ்சித்தலைவன்', 'ராஜா தேசிங்கு', 'ரங்கூன் ராதா' என பல படங்கள் அவருக்கு புகழைத் தந்தன.  கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பூம்புகார்' அவரது சிறந்த திரைப்பட  வரிசையில் ஒன்று. 'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் இவரது கணீர் குரல் வசனங்கள் அப்போது பிரபலம்.
பொதுவாக திரையுலகில் பிரபலமடைந்த பின் தனித்துவமான கதாநாயகனாக நடிப்பதையே பிரபலங்கள் விரும்புவார்கள். ஆனால் புகழ் பெற்ற கதாநாயகனாக விளங்கிய அதே காலகட்டத்தில் தன் சக நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். அந்த படங்களில் தமிழ் உச்சரிப்பாலும், கணீர் குரலாலும் தனித்து தெரிந்தார் எஸ். எஸ். ஆர்.  வீரம், சோகம், அழுகை, நகைச்சுவை என எந்த பாத்திரமானாலும் தன் தனித்த நடிப்பால் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு வரவேற்பை பெற்றவர் ராஜேந்திரன். அவரைப்போன்று தமிழை தெளிவாக உச்சரித்தவர்கள் அன்றைய திரையுலகில் சொர்ப்பமே.  இயல்பில் திராவிட கொள்கையில் ஈர்ப்பு கொண்டிருந்த அவர் திரையுலகில் பிரபலமாக விளங்கிய காலக்கட்டத்தில் அரசியலிலும் புகுந்தார்.  பேரறிஞர் அண்ணாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த  எஸ்.எஸ். ராஜேந்திரன் அவரையே தன் அரசியல் குருவாக ஏற்று அவரது தலைமையிலான தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் இல்லத்தில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் அதில் அண்ணா இன்றி நடத்தமாட்டார். தான் கட்டிய இல்லத்திற்கு அண்ணாதுரை பெயரை சூட்டி மகிழ்ந்தார். அண்ணாவின் மீதும், பகுத்தறிவு கொள்கையில் தீவிர பற்றின் காரணமாக புராண இதிகாச படங்களில் இனி நடிப்பதில்லையென ஒருநாள் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு. காரணம், அப்போது புகழின் உச்சத்தில் அவர் இருந்தார் என்பதே.

திரையுலகில் 50 களில் துவங்கி 60 களின் இறுதிவரை இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் தன்னிகரில்லாத நடிகனாக  திகழ்ந்த ராஜேந்திரன், 1962ல் தேனி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த முதல் நடிகன் என்ற புகழும் அவருக்கு கிடைத்தது. திரையுலகில் தன்னோடு இணைந்து பல படங்களில் நடித்த  பிரபல நடிகை விஜயகுமாரியுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் என்ன காரணத்தாலோ இந்த திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில்  குழந்தை பிறந்த கையோடு இருவரும் மனமொத்து பிரிந்தனர். மீண்டும் தன் முதல் மனைவி பங்கஜத்துடன் இணைந்து இறுதி காலம் வரை வாழ்ந்தார்.
திரையுலகில் பிரபலமாகியிருந்தபோதே தனது பெயரில் நாடக மன்றம் ஒன்றை துவக்கி அதில் திறமையான நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பளித்தார். எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றம் பல பிரபலமான கதைகளை நாடகமாக அரங்கேற்றியது. இதுவரை ஏராளமான திரையுலகில் பலருக்கும் வாழ்வளித்தவர். மனோரமா அதில் குறிப்பிடத்தக்கவர். அண்ணாவின் மறைவிற்கு பின் தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். 1980 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றார் எஸ்.எஸ்.ஆர்.  எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவருக்கான அரசியல் களம் தெளிவற்ற நிலையில் தி.மு.க., அ.தி.மு.க என இரு கழகங்களிலும் தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாமல் வேறு வழியின்றி அரசியலிலிருந்து ஒதுங்கினார் எஸ். எஸ். ஆர்.

திரையுலகில் அடுத்த தலைமுறை நடிகர்களாலும் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர், அவர்கள் விரும்பி அழைத்தபோது அவர்களின் படங்களின் நடித்தார். தம் இறுதிநாளில் ஞாபக மறதி நோயால் சிரமப்பட்ட அவர், எம். ஜி. ஆர் ரசிகர்கள் ஏற்பாடு செய்த ஒரு மேடையில் கருணாநிதியை புகழ்ந்து பேசி சங்கடப்பட்டுப்போனார். காரணம் எல்லா காலங்களிலும் தனக்கு எதிரிகளாக யாரையும் வரித்துக்கொண்டு அரசியல் செய்யாமல் தனித்துவமாக விளங்கியதுதான். திரையுலகில் பந்தா இல்லாமல் சக நடிகர்களுடன் போட்டி மனப்பான்மையின்றி இணைந்து பணியாற்றியது அவரது சிறந்த குணத்திற்கு சான்று. ஒரு வகையில் அரசியலில் அவர் முழு வெற்றி பெறாததற்கும் அதுவே காரணம் எனலாம்.

திரையுலகில் எத்தனை புகழோடு விளங்கினாலும் அண்ணாவை நேசித்த தன் சக திரைக்கலைஞர்களை போல எஸ்.எஸ்.ஆர் அரசியலில் பெரும் உயரத்தை எட்டி பிடிக்க முடியாமல் போனதற்கு ஒரு காரணம் உண்டு. அது அண்ணாவை அவர் நிஜமாய் நேசித்ததுதான்.

-எஸ்.கிருபாகரன்

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...