Saturday, October 7, 2017

இந்த தீபாவளிக்கு சர்வதேச, 'ஸ்வீட்' அறிமுகம் : மரபு சுவையில் தின்பண்டங்கள் தீபாவளிக்கு தயாராகும்

பதிவு செய்த நாள்
அக் 06,2017 23:27


'பருப்பு இல்லாத கல்யாணமா... இனிப்பு இல்லாத தீபாவளியா' என, முன்னோர் கூறுவதுண்டு. தீபாவளி என்பது, பண்டிகைகளின் ராணி என்பதால், பல நாட்களுக்கு முன்பிருந்தே, 'கவுன்ட் டவுண்' ஆரம்பமாகி விடும். முன்பெல்லாம், தீபாவளிக்கு, 15 நாட்களுக்கு முன்பே பெண்கள் தயாராகி விடுவர். இனிப்பு, கார வகைகளுக்கான மாவு வகைகளை தயாரிக்க ஆரம்பித்து விடுவர். தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன், ஒவ்வொருவர் வீடுகளிலும் எண்ணெய், வெண்ணெய் வாசம் மூக்கை துளைக்கும். பூந்தி லட்டு, ரவா லட்டு, பாதுஷா, அசோகா, ஜாங்கிரி, ஜிலேபி, மைசூர்பாகு, தேங்காய் பர்பி, அதிரசம், சோமாஸ், கோதுமை அல்வா என, 'ஸ்வீட்' வகைகள் தயாராகி விடும். முறுக்கு, கை முறுக்கு, பேடா, காராசேவ், மிக்சர், தட்டை, கார பூந்தி, ஓமப்பொடி ஆகிய கார வகைகளும், சமையல் அறையில் அலங்கரிக்கும். இவற்றை தயார் செய்து, உறவு - நட்பு வட்டாரத்தில் வினியோகித்து, பெண்கள் தங்களின் கைவண்ணத்தை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வர். இந்த நிகழ்வு எல்லாம் முடிந்த காலம் என்றாகி விட்டது. தற்போது, ரெடிமேட் ஆடைகள் போல, ரெடிமேட் பலகாரம் வந்தாச்சு... தீபாவளிக்கு, 'கிப்ட்' வரும் ஸ்வீட், கார வகைகளை பிரித்து, தட்டில் அழகுபடுத்தி, அக்கம், பக்கம் வீடுகளுக்கு வினியோகிப்பது, 'பேஷன்' ஆகிவிட்டது.

மக்களின் மாற்றத்திற்கு ஏற்ப தமிழகத்தில், ஏராளமான இனிப்பகங்கள் புற்றீசலாக பெருகி விட்டன. மக்களின் ரசனைக்கு ஏற்ப, ஒவ்வொரு தீபாவளிக்கும் புதிய, புதிய ஸ்வீட் வகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆவினில் அசத்தல்
தமிழக அரசின் ஆவின் நிறுவனமும், தீபாவளி ஸ்வீட் வகைகள் குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:இந்த தீபாவளிக்காக சாக்லெட் பர்பி, நட்ஸ் அல்வா; முந்திரி அல்வா, முந்திரி பர்பி ஆகியவை, 250 கிராம், 175 ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளோம். 

பாதாம் அல்வா, முந்திரி கேக், 250 கிராம், 250 ரூபாய்; பாதாம் பர்பி, 250 கிராம் 200 ரூபாய்க்கும் அறிமுகம் செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில், கருப்பட்டி அல்வா உள்ளிட்ட சில இனிப்பு வகைகள் அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த தீபாவளியின்போது, உறவினர்கள், நண்பர்களுக்கு, 'கிப்ட்' வழங்கும் வகையில், எடை அளவு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாசிபான் ருசிக்கலாம் : தீபாவளி புதிய வரவு குறித்து, அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், ஸ்ரீனிவாச ராஜா கூறியதாவது:தீபாவளிக்கு முன் பாரம்பரிய இனிப்பு, கார வகைகள் ஆதிக்கம் செலுத்தியது. அதன் பின், 'டிரை புரூட்ஸ்' ஸ்வீட்களுக்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது, சர்வதேச அளவிலான இனிப்புகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜெர்மன் இனிப்பு வகையான, 'மாசிபான்' தீபாவளிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, ஸ்வீட் பிரியர்களுக்கு விருந்தாக அமையும். மேலும், உடல் நலத்திற்கு ஏற்ற பாதாம், டிரைபுரூட், பழச்சாறுகளால் ஆனா ஸ்வீட்கள், சுகர் இல்லாத ஸ்வீட்கள் இந்த ஆண்டு, 'ஸ்பெஷல்' மேலும், பல விதமான, 'கிப்ட்' ஸ்வீட் பாக்ஸ்கள் பல வண்ணங்களில், பல்வேறு விதங்களில் அறிமுகம் செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.**

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் சிறப்பு ஸ்வீட், கார வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர், எம்.முரளி கூறியதாவது:
ஆண்டு தோறும் தீபாவளியை முன்னிட்டு, பாரம்பரிய இனிப்பு, கார வகைகளை நாங்கள் அறிமுகம் செய்து வருகிறோம். இந்த தீபாவளிக்கு, 'பட்சணம்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளோம்.

இதில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பெஷல் மைசூர்பாகு, பாதுஷா, சோன்பப்படி, பாம்பே அல்வா, ரவா லட்டு, அதிரசம், மிக்சர், கைமுறுக்கு, உப்பு, இனிப்பு சீடை உள்ளிட்டவை இடம் பெறும். இதனுடன், தீபாவளி லேகியம், கங்கா தீர்த்தம் மற்றும் சுவாமி பிரசாதமும் வழங்கப்படும்.

மேலும், வால்நட் பைட், கேஷ்யூ பைட், சிட்டிஸ், கருப்பட்டி லட்டு, கருப்பட்டி கேக், எள்ளு லட்டு, தேங்காய் லட்டு, டிரைபுரூட்ஸ் லட்டு, மாலாடு, முந்திரி லட்டு ஆகியவை தீபாவளி, சிறப்பு ஸ்வீட் வகைகளில் இடம் பெறும்.தீபாவளிக்கு, 100 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையிலான, 'கிப்ட் பாக்ஸ்'களை அறிமுகம் செய்துள்ளோம்.

மொத்தம், 150 இனிப்பு வகைகளும், 75 கார வகைகளும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் சுவை அறிந்து வாங்குவதற்காக அனைத்து கடைகளிலும், 'சாம்பிள்' வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளிக்கு ருசிக்க வெள்ளியணை அதிரசம் 

கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன் வெள்ளியணையில் கோபால் நாயுடு என்பவர் அதிரசம் விற்பனையை துவக்கி வைத்தார். இன்று, 25க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் அதிரசம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
கரூரில் இருந்து திண்டுக்கல் செல்பவர்கள், வெள்ளியணையில் வாகனங்களை நிறுத்தி, அதிரசம் வாங்கிச் செல்வதைப் பார்க்கலாம். கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட உள்ளூர் தேவைகளுக்குப் போக, வெளியூர் விற்பனைக்காகவும் அதிரசம் தயாரித்து அனுப்பப்படுகிறது.

கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், வெள்ளியணை அதிரசம் கட்டாயம் பரிமாறப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் கூடும் வாரச்சந்தைகளில் வெள்ளியணை அதிரசம் களைகட்டும்.

குறிப்பாக, தீபாவளி பண்டிகையின்போது, வெள்ளியணை அதிரசத்தை பொதுமக்கள் ஆர்டர் செய்து வாங்கிச் செல்வர். தீபாவளி வரும் அக்., 18ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, வெள்ளியணை அதிரசத்துக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து, அதிரசம் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:

காவிரி மற்றும் அமராவதி ஆற்று தண்ணீர் காரணமாக வெள்ளியணையில் தயாரிக்கப்படும் அதிரசத்துக்கு தனிச் சுவை கிடைக்கிறது. அதிரசத்தில் வெள்ளை சர்க்கரை சேர்ப்பதில்லை.
அச்சு வெல்லம் மட்டும்தான் பயன்படுத்துகிறோம். எனவே, இதை சர்க்கரை நோயாளிகளும் கூட அளவாக சாப்பிடலாம். பச்சரிசி, அச்சு வெல்லம், ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்த கலவையில், கால்சியம் உள்ளது. இதனால், எலும்பு பாதிக்கப்பட்டவர்கள் அதிரசம் சாப்பிட வேண்டும் என, டாக்டர்களே கூறுகின்றனர்.

பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து, பிறகு காய வைத்து கிரைண்டரில் அரைத்து மாவு தயாரிக்கிறோம். பிறகு, அச்சு வெல்லத்தை பாவு காய்ச்சி இரண்டையும் சேர்த்து ஏலக்காய் மற்றும் சீரகம் கலந்து அதிரசம் தயார் செய்யப்படுகிறது. இதற்கு கடலை எண்ணெய்தான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை, மறுமுறை பயன்படுத்துவது கிடையாது.

வழக்கமாக எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும் பலகாரங்களில், எண்ணெய் அதிகளவில் இருக்கும். ஆனால், வெள்ளியணையில் தயார் செய்யப்படும் அதிரசத்தில் அவ்வளவாக எண்ணெய் இருக்காது. 50 நாட்கள் வரை, அதிரசம் கெடாமல் இருக்கும். எண்ணெய் வாடை வராது. தீபாவளி பண்டிகைக்காக ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024