புதுடில்லி:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதியை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி இன்று வெளியிடுகிறார்.
கடந்த, 10 ஆண்டுகளாக பரபரப்பு ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு தேதி வெளியாவதால், அரசியல் திருப்பம் நிகழும் என, தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2007 முதல், 2009 வரை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.
அப்போது, செல்போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப் பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது.
இந்த வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. அதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக அதிக அளவுஆவணங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளதால், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்துக்கு முடிவு ஏற்பட உள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் பல்வேறு பரபரப்பு அரசியல் காட்சிகள் நிகழ்ந்து வரும் நிலையில்,
'2ஜி' வழக்கின் தீர்ப்பால், பல அரசியல் திருப்பம் நிகழும் என்பதால், தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
குற்றவாளிகள் யார்?:
'2ஜி' ஸ்பெக்ட்ரம்
ஊழல் வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, கனிமொழி ஆகியோரை குற்றவாளிகளாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.
மேலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பகுரா, ராஜாவின் முன்னாள் உதவியாளர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் - அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளான, கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், 'டிவி'க்கு அளித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. அதில், ராஜா, கனிமொழியுடன், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment