Thursday, October 26, 2017

அரசு ஊழியர்களையும் அலற வைக்கும் கந்து வட்டி! : 'சைடு பிசினஸ்' செய்யும் போலீசார்

அரசு ஊழியர்களையும் அலற வைக்கும் கந்து வட்டி! : 'சைடு பிசினஸ்' செய்யும் போலீசார்
திருநெல்வேலி: கந்து வட்டி கொடுமை, அரசு ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் வட்டிக்கு கடன் வாங்கி, மாத ஊதியம் முழுவதையும் கந்து வட்டி குண்டர்களிடம் அளிக்கும் சம்பவங்கள், தமிழகம் முழுவதும் தொடர்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, 27, கந்து வட்டி தொல்லை காரணமாக, மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் தீக்குளித்தார்; நால்வரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கந்து வட்டி தொடர்பாக புகார் அளிக்க, மாவட்ட நிர்வாகம் தனிப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கென தனி மொபைல் நம்பரையும் வழங்கியுள்ளது. இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

அவசர கடன் : நெல்லை மாவட்டத்தில், கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதில், பலரும் ஈடுபட்டாலும், இத்தொழிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள், பீடி தொழிலாளர்களை குறி வைத்து, கடன் வழங்குகின்றனர். குறைந்தபட்சம், மாதம், 10 சதவீத வட்டிக்கு பணம் வழங்குகின்றனர். தினசரி, வாரம், மாதம் என, வட்டி வசூலிக்கின்றனர்.

ஏழை, எளிய மக்கள், இல்லாதோர் அவசரத்திற்கு பணம் கிடைப்பதை எண்ணி, அவர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். இந்த நிலை தொடரும் போது, ஒருவரிடம் வாங்கிய கடனை, மற்றவரிடம் வாங்கி அடைக்கின்றனர். அதிக வட்டி என்பதால், அசலுக்கு மேல், வட்டி கட்டியும், கடன் முழுவதையும் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களும், கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தவிக்கின்றனர்.

அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் கண்டக்டர்கள், டிரைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் பலரும், கந்து வட்டிக்கு பணம் வாங்கி சீரழிகின்றனர். மகன், மகள் படிப்பு, வேலை, திருமணம் என, இவர்கள் வாங்கும் கடனை அடைக்க முடியாமல், மாத சம்பளம் முழுவதும் வட்டியிலேயே மூழ்குகிறது.

பின், வீட்டு செலவுக்கு பணம் பத்தாமல், மறுபடியும் வட்டி கும்பலை நாடுகின்றனர். சில மாதங்களாக வட்டி கட்ட முடியாமல் போனால், அந்த வட்டி தொகையை, அசலுடன் சேர்த்து, அதற்கும் வட்டி தர வேண்டும் என, கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால், கந்து வட்டி, மீட்டர் வட்டி, புல்லட் வட்டி, ராக்கெட் வட்டி என விஸ்வரூபம் எடுக்கிறது. கந்து வட்டி கும்பலின் பிடியில், மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களும் சிக்குகின்றனர்.

இதற்கு கடிவாளம் போட வேண்டிய போலீசார், கந்து வட்டி கும்பலுக்கு துணை போகின்றனர். சில போலீசார், தங்களுக்கு கிடைக்கும் மாமூல் வருவாயை, உறவினர்கள் மூலம், கந்து வட்டி தொழிலில் முதலீடு செய்துள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

எவ்வளவு வட்டி? : இது குறித்து, கந்து வட்டிக்கு பணம் தரும் சிலர் கூறுகையில், 'நாங்கள் யாரையும் தேடி சென்று, கடன் கொடுப்பதில்லை. வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எங்களிடம் வந்ததும், பணம் கிடைக்கிறது என்பதால் வருகின்றனர். 'நாங்கள் கூறும் வட்டி விகிதத்திற்கு ஒப்புக்கொண்டே பணம் வாங்குகின்றனர். எங்களை போல, பலரிடமும் கடன் வாங்கி, சிலர் சிக்கலில் மாட்டி கொள்கின்றனர்' என்றனர். வங்கிகளில் குறைந்த பட்சமாக, விவசாய நகை கடன், ஆண்டுக்கு, 4 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. மற்ற நகை கடனுக்கு, 11 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. பர்சனல் கடன், வாகன கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கு அதிகபட்சம், 15 முதல், 18 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றனர். 'ஆண்டுக்கு, 18 சதவீதம் வட்டி சட்டத்திற்கு உட்பட்டது' என, பதிவு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடும்பத்துடன் புகார் : திருநெல்வேலியை அடுத்துள்ள ஆரைக்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 36; கூலித் தொழிலாளி. இவர், அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம், 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 10 சதவீத வட்டியாக, மாதம், 500 வீதம், மூன்று ஆண்டுகளில், 18 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தி உள்ளார். ராமச்சந்திரன் மேலும், 15 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து, முன்னீர்பள்ளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதை விசாரித்த போலீசார், ராமச்சந்திரனுக்கு ஆதரவாக தங்களிடம் எழுதி வாங்கியுள்ளதாக தெரிவித்து, ஆறுமுகம், மனைவி, மூன்று குழந்தைகளுடன் வந்து, நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...