Tuesday, October 3, 2017

பரோல்' விதிகளை திருத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: 'குற்றவாளிகளும், சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் திருந்தி வாழவும், குடும்ப, சமூக தொடர்புகளை மேம்படுத்தவும், 'பரோலில்' அனுமதிப்பதற்கான விதிகளை மேம்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




கடந்த, 1993ம் ஆண்டு, டிச., 6ல், ரயில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், தடா நீதிமன்றத்தால், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவன், அஸ்பாக். தனக்கு, தொடர்ந்து, 'பரோல்' அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி,  அசோக் பூஷண் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:குற்றவாளிகளை திருத்தவே, தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த நோக்கத்தை அடையும் வகையில், பரோலில் விடுவிப்பது, சட்டத்துக்குஉட்பட்டது தான்.

சுதந்திர காற்றை சுவாசிக்க

தண்டனைக் காலத்தில், குறைந்த நாட்கள், பரோலில் குற்றவாளிகளை விடுவிப்பது, அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும்; சமூகத்துடன் அவர்களுக்கு உள்ள தொடர்பை, நிலைநிறுத்த முடியும்.குற்றவாளிகள், தங்களின் குடும்ப மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில், பரோல் அனுமதிக்கப்பட வேண்டும். திருந்தி வாழ்வதில் ஆர்வம் உள்ள,நன்னடத்தை மிக்க குற்றவாளிகள், குறைந்த காலத்திற்காவது, சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிக்க வேண்டும்.

1955ல் இயற்றப்பட்ட விதிகள்

குற்றவாளி கள் திருந்தி வாழ்வது,  சமூகத்திற்கும் நன்மை பயக்கும்.எனவே, தண்டனை கைதிகளை, 'பரோலில்' தற்காலிகமாக விடுதலை செய்வது மற்றும் நீண்ட கால தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்வது ஆகியன குறித்து, 1955ல் இயற்றப்பட்ட விதிகளை, மத்திய அரசு மேம்படுத்த வேண்டும். 

பரோலில் விடுவிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, உரிய விதிகளை அரசு வழங்க வேண்டும். இந்த தீர்ப்பின் முழு விபரம், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024