நகைக்கடைகளின் தங்கநகை விற்பனை மோசடி பற்றிய எச்சரிக்கை!
By DIN | Published on : 26th October 2017 05:05 PM
தங்க மோசடி!
உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க வியாபாரம் தானாம்! அதைப்பற்றி முகநூலில் ஒருவர் பகிர்ந்திருந்த வாட்ஸ் அப் தகவல் அடிப்படையிலான கட்டுரை தங்கம் வாங்குவோரை யோசிக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் இதுவரை எந்தப் பிரபல அல்லது பிரபலமில்லாத தங்க நகைக்கடை அதிபர்களாவது பதில் சொல்ல முயன்றிருக்கிறார்களா?
இந்தக் குற்றச்சாட்டுகளில் நிஜமிருக்கும் பட்சத்தில் மக்களுக்கு அது குறித்த கவலைகள் ஏதுமில்லையா? இப்போதும் நகைக்கடைகளில் தேன்கூட்டில் மொய்க்கும் தேனீக்களைப் போலத்தானே மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
முதல் மோசடி:
- கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குகிறார்கள்
- நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் அமெரிக்கன் டைமன் எனும் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்?! நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் அமெரிக்கன் டைமன் கல்லுக்குக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.
- ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். ‘தங்கத்தின் விலையும் கல்லின் விலையும்’ சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.
- நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு ‘கல்லுக்கு தனியாகவும்’ பணத்தை வாங்கி ‘இரட்டை மோசடி’ செய்கிறார்கள்.
- அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் ‘கல்லை அப்புறப்படுத்தி விட்டு’ தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா? என்று தெரியவில்லை.
இரண்டாவது மோசடி:
- சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும். ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.
- 916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.
மூன்றாவது மோசடி:
- தங்கத்துக்கு இன்றைய காலத்தில் ‘இரண்டு விலை’ உள்ளது.
- ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில்
- தயார் செய்வதற்கான கூலியாகும்.
- ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால், ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.
- ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு ‘சேதாரம்’ என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.
- அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர்.
- அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.
- நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.
- நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
- இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.
- அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.
- ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை.
- அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா?! அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.
‘கிட்டத்தட்ட பகல் கொள்ளையே தான்!’
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களில் நிஜமில்லை எனில் தங்க நகை விற்பனையாளர்கள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை மறுத்து மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக விளக்கம் தரலாம். விளக்கத்தையும் வெளியிடத் தயாராக உள்ளது தினமணி.காம்.
No comments:
Post a Comment