Sunday, December 3, 2017

திருவாரூரில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு





திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக மழை பெய்தது. பின்னர் சில வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கடந்த 5 தினங்களுக்கு முன்பு மழை தொடங்கியது. இரு தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை சனிக்கிழமை காலை வரை சீராக பெய்தபடி இருந்தது. பின்னர், சனிக்கிழமை பகல் முழுவதும் மழை தொடர்ந்தது. 

குளிர்ந்த வானிலை நிலவியதுடன் பகல் முழுவதும் சற்று குறைவான வெளிச்சத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பகல் நேரத்திலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். சீரான மழை என்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. எனினும் நீர்நிலைகள், விளைநிலங்கள் ஆகியவற்றில் நீரின் அளவு உயர்ந்து வருகிறது.

திருக்கார்த்திகை என்பதால் மழை பெய்தபோதிலும் கடைகள் திறந்திருந்தன. கடைவீதிகளில் குடைகளுடனும், மழைகோட் அணிந்தபடியும் மக்கள் சென்றனர். சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி குடவாசலில் 93.2 மி.மீ மழை பெய்துள்ளது.

பிற இடங்களில் மழை அளவு விவரம்: திருவாரூர் 79.6 மி.மீ, வலங்கைமான் 79.6 மி.மீ, நீடாமங்கலம் 69.4 மி.மீ, நன்னிலம் 62.8 மி.மீ, பாண்டவையார் தலைப்பு 55.8 மி.மீ, மன்னார்குடி 48 மி.மீ, என திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 536.8 மி.மீட்டர் மழையும், சராசரியாக 59.64 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
சாலைகள் பாதிப்பு...
மயிலாடுதுறை சாலையிலிருந்து கொடிக்கால்பாளையம் வழியாக திருவாரூர் வரும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதேபோல், அம்மையப்பனிலிருந்து திருக்கண்ணமங்கை வரும் சாலை, திருவாரூர் அரசு மருத்துவமனையிலிருந்து தஞ்சை சாலைக்கு வரும் இணைப்பு சாலை உள்ளிட்டவையும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024