Saturday, May 2, 2015

அக்டோபர் 15–ந்தேதிக்குள் மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்

புதுடெல்லி,

அக்டோபர் 15–ந்தேதிக்குள் மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து கணக்கு

லோக்பால், லோக் அயுக்தா சட்டம், 2013–ன் கீழ் மத்திய அரசு ஊழியர்கள், தங்களது சொத்துகள், கடன்கள் பற்றிய கணக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த வகையில், 2014, 2015 ஆண்டுகளுக்கான சொத்துகள், கடன்கள் பற்றிய கணக்கு விவரங்களை மத்திய அரசு ஊழியர்கள் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த மாதம் 30–ந்தேதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டிய 2014–ம் ஆண்டுக்கான கணக்கையும், ஜூலை மாதம் 31–ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய 2015–ம் ஆண்டுக்கான கணக்கையும், வரும் அக்டோபர் 15–ந்தேதி அன்றோ, அதற்கு முன்னதாகவோ மத்திய அரசு ஊழியர்கள் தாக்கல் செய்து விட வேண்டும்.

கடிதம்

இது மத்திய பணியாளர் நலன், பயிற்சிகள் துறை அமைச்சகம், மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் இந்த கணக்குகளை தாக்கல் செய்ய வசதியாக இந்தக் கடிதம், மாநில அரசுகளின் தலைமைச்செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தாக்கல் செய்யாவிட்டால்?

இந்த கணக்கில் மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்கள் கையில் உள்ள ரொக்க கையிருப்பு, வங்கி டெபாசிட்டுகள், பத்திரங்கள், கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதி ஆகியவற்றில் செய்துள்ள முதலீடுகள், காப்பீடு பாலிசிகள், வருங்கால வைப்பு நிதி, பெர்சனல் கடன்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும்.

லோக்பால் சட்டப்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களது சொத்து கணக்கை தாக்கல் செய்ய தவறினால், அவை ஊழல் செய்து சேர்த்த சொத்துகளாக கருதப்படும் என்று மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சிகள் துறை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024