Wednesday, October 18, 2017


திக்கெட்டும் தீபச்சுடர் பிரகாசிக்கட்டும்

திக்கெட்டும் தீபச்சுடர் பிரகாசிக்கட்டும்
திக்கெட்டும் தீபச்சுடர் பிரகாசிக்கட்டும்

பண்டிகைகளின் ராஜா பெரியவர் அருளுரை

பகவத் கீதையை 'தீபாவளியின் தம்பி' என்று நான் குறிப்பிடுவது வழக்கம்.தியாகத்தாய் சத்தியபாமா, தன் மகனை இழந்த நிலையில், பகவான் கிருஷ்ணரிடம் அந்த நாளை உலகிலுள்ள அனைவரும் கோலாகலமான பண்டிகையாக கொண்டாட வரம் பெற்றதால் தீபாவளி பண்டிகைகளின் ராஜாவாக இருக்கிறது.
தத்துவ சாஸ்திரங்களில் சிகரமாக இருப்பது பகவத்கீதை. தீபாவளி போலவே தியாகத்தின் பின்னணியில் தோன்றியதால் இப்படி சொல்ல வேண்டியிருக்கிறது.உபதேசம் என்பது, குருநாதர் சீடர்களுக்கு செய்வதாக இருக்கும். ஆனால், கீதையோ நெருக்கடியான சூழ்லில் போர்க்களத்தில் பிறந்தது. எஜமானராக இருக்கும் அர்ஜுனன், வண்டிக்காரனாக தேரோட்டும் பார்த்தசாரதியிடம் பெற்றஉபதேசம்.
“சிஷ்யனாக உன்னிடம் சரணடைந்தேன்.” என்று அர்ஜுனன் கேட்ட போது கீதை பிறந்தது. இதனால் இது 'தீபாவளியின் தம்பி' என்ற அந்தஸ்தை பெறுகிறது. பண்டிகைகளில் ராஜா தீபாவளி மாதிரி, தத்துவங்களில் கீதை உயர்ந்ததாக உள்ளது.

செல்வம் நிலைக்க லட்சுமி பூஜை செய்யுங்க!

பண்டிகைகளிலேயே அதிகம் செலவழிப்பது தீபாவளிக்கு மட்டும் தான். இதற்கு ஏராளமாக பணம் வேண்டும். இப்பணத்திற்கு அதிபதி குபேரலட்சுமி. வாழ்க்கை முழுவதும் தீபாவளி போல் செழிப்பாக வாழவும், செல்வம் நிலைக்கவும் குபேர லட்சுமியை பூஜிப்பது நன்மை தரும். மங்கல திரவியங்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, வெள்ளை நிற மலர்கள், சந்தனம், பழம், அட்சதை, நவதானியம் ஆகிய பொருட்களை லட்சுமி பூஜையின் போது படைக்க வேண்டும். 'ஓம் குபேராய நமஹ' 'ஓம் மகா லட்சுமியை நமஹ' ஆகிய மந்திரங்களை 108 முறை ஜெபித்து தீபம் காட்ட வேண்டும்.

◆ நற்குணங்களின் இருப்பிடமே! கருணையின் விலாசமே! அன்பில் சிறந்தவனே! அசுரர்களை துவம்சம் செய்தவனே! இடைக்குலத்தின் தவக்கொழுந்தே! மேகம் போல நீலவண்ணனே! கண்ணனே! மதுரா நகர வாசியே! மின்னல் போல் ஜொலிக்கும் பட்டு பீதாம்பரதாரியே! கிருஷ்ணனே! உன்னை வணங்குகிறேன்.
◆ என் மனத் தாமரையில் எப்போதும் இருப்பவனே! நந்த கோபர் வளர்த்த பிள்ளையே! எல்லா துன்பங்களையும் அடியோடு போக்கியருள்பவனே! லீலைகள் பல புரிந்ததால், கோபியர் மனதை விட்டு அகலாத செல்வமே! கிருஷ்ணனே! வழிபடுகிறேன்.
◆ கதம்ப மலரைக் காதில் குண்டலமாகத் தரித்தவனே! மிக அழகான கன்னங்களைக் கொண்டவனே! கோபிகைப் பெண்களின் நாயகனே! நந்தகோபருக்கும் யசோதைக்கும் அன்பைப் பொழிந்தவனே! வழிபடும் அடியவர்க்கு சுகம் தருபவனே! கோபி கிருஷ்ணனே! உன்னை தியானிக்கிறேன்.
◆ பூபாரத்தைப் போக்கியவனே! பிறப்பு இறப்பு என்னும் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிப்பவனே! பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தோணியே! யசோதையின் இளஞ்சிங்கமே! வெண்ணெய்யை விரும்பித் திருடுபவனே! சாதுக்கள் மீது பற்று கொண்டவனே! நாளும் புதிய கோலத்தில் காட்சி அளித்தவனே! நந்தகோபனின் செல்வமே! கிருஷ்ணனே! உன்னைச் சரணடைகிறேன்.
◆ இடைக்குலத்தின் திலகமாகத் திகழ்பவனே! ஆயர் குலத்தின் அணிவிளக்கே! ஆனந்தம் அருள்பவனே! தாமரை போல இருக்கும் என் மனதில் மோகத்தைத் துாண்டுபவனே! சூரியன் போல பிரகாசிப்பவனே! வேணுகானம் இசைப்பதில் வல்லவனே! யாவரும் விரும்பும் அழகு மிக்கவனே! கடைக்கண் பார்வையால் அன்பர்களுக்கு வேண்டும் வரம் தந்தருள்பவனே! கிருஷ்ணனே! உன்னைப் போற்றி மகிழ்கிறேன்.
◆ ஆயர்பாடிக்கு அலங்காரமாக திகழ்பவனே! பாவங்களில் இருந்து காப்பவனே! பக்தர்களின் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவனே! நந்தகோபரின் புத்திரனே! மயில்தோகையை தலையில் சூடியவனே! இனிய புல்லாங்குழலை கையில் ஏந்தியவனே! மன்மதனைப் போல கோபியரிடம் விளையாடி மகிழ்ந்தவனே! மதுராநாயகனே துதிக்கிறேன்.

தீபாவளி கொண்டாட்டம் ஏன்?

பிரம்மாவின் வேதங்களை கவர்ந்த அசுரன் ஹிரண்யாட்சன் பாதாள லோகத்தில் ஒளிந்தான். அதை மீட்க, பெருமாள் வராக அவதார மெடுத்து பூமிக்குள் சென்றார். அப்போது, பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் அவளுக்கு 'பவுமன்' மகன் பிறந்தான். பவுமன் என்றால் 'பூமியின் பிள்ளை' என்பது பொருள். பொறுமை மிக்க தாய்க்கு பிறந்த அவன், கெட்ட குணங்கள் மிக்கவனாக திரிந்தான். இவன் 'நரகாசுரன்' என்று அழைக்கப்பட்டான்.
இந்தியாவின்வட கிழக்கிலுள்ள தற்போதைய அசாம் பகுதியை அவன் ஆட்சி செய்து வந்தான். 'ப்ராக்ஜோதிஷபுரம்' என்று தன் ஊருக்குப் பெயரிட்டான். 'பிரகாசமான பட்டணம்' என்பது இதன் பொருள். பேரில் மட்டும் ஒளியை வைத்துக் கொண்டு, அசுரனான பவுமனின் செயல்கள் அனைத்தும் இருளை உண்டாக்கும் விதத்தில் அட்டூழியமாக இருந்தன.
தேவர்களையும், பூலோக மக்களையும் கொடுமை செய்தான். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை யாரும் தட்டிக் கேட்க இயலவில்லை. இருப்பினும், அவனது அட்டூழியம் பொறுக்காமல் பிரம்மா, பெருமாளிடம் புகார் செய்தார்.ஆனால், நரகாசுரனோ தன்தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். அப்போது, பூமாதேவி, சத்தியபாமாவாகப் பிறந்து கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள். கிருஷ்ணர் அவளை அழைத்துக் கொண்டு நரகாசுரனுடன் போருக்குச் சென்றார். 
ஒரு கட்டத்தில், நரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையடைபவர் போல் நடித்தார். பதறிப்போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற தன் மகன் மீது அம்பு தொடுத்தாள். நரகாசுரன் மாண்டான்.இறந்தது கொடிய பிள்ளை என்றாலும் பெற்ற வயிறு பதறியது. அதே நேரம் அவனது இறப்பை, எல்லா உலகமும் தீபமேற்றிக் கொண்டாடுவதை பார்த்தாள். பெருமாளிடம், தன் மகன் இறந்த நாளை 'தீபாவளி' என்றும், மகனின் பெயரால் 'நரக சதுர்த்தசி' என்றும் பெயரிட்டு கொண்டாட அனுமதி கேட்டாள். ஒருவர் இறந்தால், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்கம். அந்த எண்ணெயில் லட்சுமியும், அந்தக் காலம் குளிர் காலமாக இருந்ததால், மக்கள் குளிக்கும் வெந்நீரில் கங்கையும் வாசம் செய்ய வேண்டும் என்று வரம் பெற்றாள். அதனால், இந்த நீராடல் 'கங்கா ஸ்நானம்' என்றானது.

குபேரன் போல வாழ ஆசையா...

நரகாசுரன் அசுர குணம் உள்ளவன். அதனால் அவன் அழிந்தான். எனவே, சாந்த குணத்தை வளர்த்துக் கொள்ள தீபாவளியன்று உறுதியெடுக்க வேண்டும். குபேரன் சாந்த குணம் உடையவர். ஒருவன் செல்வந்தனாக வாழ்வதற்கு சாந்த குணமே (பொறுமை காத்தல்) அவசியம் என்பதை சமுதாயத்துக்கு உணர்த்துகிறார். குபேரன் போல பணக்காரன் ஆக வேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதன் பின்னணியில் உழைப்பு மிக அவசியம் என்பதை உணர வேண்டும். 
உழைப்பாளிகளை குபேரனுக்கு மிகவும் பிடிக்கும். 
குபேர ஸ்லோகம்ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநேநமோ வயம் வைஸ் ரவணாய குர்மஹேஸ மே காமாந் காமகாமாய மஹ்யம்காமேஸ்வரோ வைஸ்ரவணோ ததாதுகுபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நமஹ:என்ற ஸ்லோகத்தை, தீபாவளியன்று 11 முறை சொல்லி லட்சுமி குபேரரை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் வளம் பெருகும்.

தீபாவளியன்று திறக்கும் சன்னதி

காசியில் உள்ள பழமையான அன்னபூரணி அம்மன் கோயிலில் அம்பாள் விக்ரகம் சொக்கத் தங்கத்தால் ஆனது. இவளது சன்னதி தீபாவளியான இன்றும், நாளையும் திறந்திருக்கும். மற்ற நாளில் கதவின் துவாரம் வழியாக தரிசிக்கலாம். தீபாவளியான இன்றும், நாளையும் இந்த சன்னிதி இனிப்பு வகைகளால் நிரப்பப்படும். லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி தீபாவளி நன்னாளில் வலம் வருவாள்.

No comments:

Post a Comment

NEWS TODAY