Wednesday, October 18, 2017

அரசு அலுவலகத்தில், 'பிரீ பெய்டு' மீட்டர் ஜனவரியில் அமல்படுத்தும் மின் வாரியம்

அரசு அலுவலகங்களில், மின் கட்டணத்தை சரியாக வசூலிக்க, 'பிரீ பெய்டு' மீட்டர் பொருத்தும் திட்டத்தை, வரும் ஜனவரி முதல் அமல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், உள்ளாட்சி, போக்குவரத்து, காவல்துறை என, அனைத்து அரசு துறைகளின் அலுவலகத்திற்கும், மின் சப்ளை செய்கிறது. வீடுகளில் இருப்பது போல், அந்த அலுவலகங்களிலும், மின் பயன்பாட்டை கணக்கிட, மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. பல துறைகள், ஆண்டுக்கணக்கில், மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளன. இதையடுத்து, அரசு அலுவலகங்களில், கட்டணத்தை சரியாக வசூலிக்க, 'பிரீ பெய்டு' என்ற மீட்டர் பொருத்தும் பணியை, முழு வீச்சில் துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீடுகளில், தற்போது, மின் பயன்பாட்டை கணக்கிட, 'ஸ்டேடிக்' மீட்டர் பொருத்தப்படுகிறது. அதில், மின் பயன்பாடு துல்லியமாக பதிவாவதால், அதற்கேற்ப கட்டணமும் வசூலாகிறது. அரசு அலுவலகங்களில், இதுவரை, அந்த மீட்டர் பொருத்தப்படவில்லை. அவற்றை பொருத்தினால், செலுத்த வேண்டிய கட்டணம் மேலும் அதிகரிக்கும். அப்படி இருந்தும், அரசு துறைகள், கட்டணத்தை ஒழுங்காக செலுத்துவதில்லை.இதற்கு தீர்வு காண, மற்ற மாநில அரசு அலுவலகங்களில் இருப்பது போல், தமிழகத்திலும், 'பிரீ பெய்டு' மீட்டர் பொருத்தப்பட உள்ளது. அந்த மீட்டரில், பணத்திற்கேற்ப, மின் சப்ளை செய்யும் மென்பொருள் பதிவேற்றப்படும். கட்டணம் தீர்ந்து விட்டால், மின் சப்ளை தானாகவே துண்டிக்கப்படும். இவை, மின் வாரிய, 'சர்வர்' வாயிலாக கண்காணிக்கப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அரசு துறைகளுக்கு, மார்ச்சில் கடிதம் எழுதப்பட்டது. தற்போது, மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதப்படும். சோதனை ரீதியில், ஜனவரி முதல் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY