“யோவ் வெளியே போய்யா” - முதல்வர் பழனிசாமி விழாவில் தள்ளப்பட்ட எம்.எல்.ஏ!
JAYAVEL B
ஸ்ரீபெரும்புதூர், வல்லம்-வடகால் பகுதியில் சிப்காட் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியில் வானூர்தி உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா தொடங்குவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 245 ஏக்கர் பரப்பளவில் அதற்கான இடம் ஒதுக்கப்பட்டு, 198 கோடி மதிப்பில் தொடங்கப்படும் இந்தப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமிவந்திருந்தார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், தொழில்துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டார்கள். முதலமைச்சரை வரவேற்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, வழிநெடுகிலும் முதல்வர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், எம்.எல்.ஏ பழனி ஆகியோரின் படங்கள் அடங்கிய பேனர்கள் அ.தி.மு.க-வினர் வைத்திருந்தனர். மழை என்பதால் தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட பேனர்கள் சாலைகளின் குறுக்கே விழுந்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்தன. இவ்விழாவில் முதல்வர் பேசவே இல்லை.
அடிக்கல்நாட்டு விழா முடிந்ததும், முதல்வர் சிற்றுண்டி சாப்பிட ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் பழனிசாமியும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் அந்த அறையின் உள்ளே சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனியும் அவர்களுடன் உள்ளே செல்ல முயன்றார். அப்போது பாதுகாப்புப் படையினர் ‘யோவ் வெளியே போய்யா’ என அவர் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார்கள். அருகிலிருந்த அமைச்சரின் உதவியாளர் ஒருவர் ஓடிவந்து, ‘தள்ளாதீங்க… இவர்தான் இந்தத் தொகுதி எம்.எல்.ஏ’ எனச் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார். கோபத்தில் பாதுகாப்பு போலீஸாரை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றார் எம்.எல்.ஏ பழனி.
No comments:
Post a Comment