காலியாக இருக்கும் மருத்துவர் பணியிடங்கள் எத்தனை? - நீதிமன்றம் கேள்வி
அருண் சின்னதுரை
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிட விவரங்களை தாக்கல் செய்ய சுகாதார செயலருக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ராமநாதபுரத்தைச் சார்ந்த ராஜூ என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், "ராமநாதபுரம் கீழக்கரை அரசு மருத்துவமனையைச் சார்ந்து 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுவருகின்றனர், ஆனால், கீழக்கரை, ஏர்வாடி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
கீழக்கரை அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர் மற்றும் ஓர் ஆய்வக நிபுணர், மருத்துவமனை ஊழியர், பிசியோதெரபிஸ்ட், இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், பிரசவ அறை உதவியாளர், குடும்ப நல அலுவலர், 2 சமையலர் பணியிடங்கள் என மொத்தம்18 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் முறையான சிகிச்சை இன்றி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் காலியாக உள்ள மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட்ட மற்றும் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களின் விபரங்களைத் தாக்கல் செய்ய தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை அக். 27-க்கு ஒத்திவைத்தனர்
No comments:
Post a Comment