டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
Published : 22 Oct 2017 20:53 IST
சென்னை
டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ''தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த வாரம் இருந்த பாதிப்பு இந்த வாரம் இல்லை. காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்தாமல், கவனக்குறைவாக இருக்காமல், தாமதப்படுத்தாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் 5 நாளும், குழந்தைகள் 7 நாளும் சிகிச்சை பெற வேண்டும். அதன் பின்னரே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். போலி டாக்டர்களைக் கைது செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் யாரும் தானாக கடைக்குச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்.
பள்ளிகள் மூலமாக மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் முழுவீச்சில் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
No comments:
Post a Comment