Sunday, October 8, 2017

கோவிலுக்கு வெறும் கையுடன் செல்லலாமா?

Published on : 07th October 2017 04:21 PM |


ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பார்கள். ஆலய வழிபாடு தொன்று தொட்டு வரக்கூடியது. நமக்கு நேரம் கிடைக்கும் போது ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொள்ளலாம்.

கோயில் தொடர்பான பொதுவான கேள்விகளும், பதில்களும்...

• கோவிலுக்கு வெறும் கையுடன் செல்லலாமா?

கோவிலுக்குச் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

• கடவுளையும், பெரியோர்களையும் காண செல்லும் போது ஏதாவது வாங்கிக்கொண்டு செல்ல வேண்டுமா?

நிச்சயம். கடவுளையோ, பெரியோர்களையோ காண செல்லும் போது கனிகளையோ, மலர்களையோ அல்லது ராஜகனி என வர்ணிக்கப்படும் எலுமிச்சை பழத்தை கொண்டு செல்ல வேண்டும்.

இந்து சாஸ்திர நெறிமுறைப்படி பணம் சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் கோயிலில் வழங்கும் நைவேத்திய பொருள்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் கடவுளால் பொருள் ஈட்ட முடியாது. நாம் கொடுக்கும் பொருள்களே நைவேத்தியத்திற்குப் பயன்படும். நம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமில்லாமல் பல குடும்ப உறுப்பினர்களின் ஆசிர்வாதங்கள் நமக்கும் கிடைக்கும்.

• கடவுளுக்கு அணிவிக்கும் மாலை அல்லது எலுமிச்சை பழங்களை ஊசியில் கோர்க்கலாமா?

ஊசி என்னும் ஆயுதத்தால் குத்தப்பட்ட மலர்களையோ அல்லது கனிகளையோ இறைவனுக்கு அணிவிக்கக்கூடாது. மலர்களை தொடுத்தே (மலர்களை நு}லால் கட்டி) இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். கனிகளை இறைவனின் பாதத்திற்கு அர்ப்பணிப்பது சாலச் சிறந்தது.

• விஷ்ணு ஆலய வழிபாட்டு முறைகள்

பெருமாள் ஆலயங்களில் முதலில் சக்கரத்தாழ்வாரை வணங்க வேண்டும். பின்னர் இன்ன பிற தெய்வங்களை வழிபட வேண்டும். திருச்சுற்றில் செல்வ திருமகளான அன்னை மகாலட்சுமியை வழிபட வேண்டும். அன்னையிடம் கோரிக்கைகளை வைத்த பின்னர் ஜெகத் ராட்சகனான காக்கும் கடவுளான திருமாலிடம் கோரிக்கைகளையும், பிரார்த்தனைகளையும் சொல்லி கருணையுடன் வேண்ட வேண்டும்.

கடைசியாக வாயு புத்திரனான அனுமனிடம் விடை பெற்று கொடி மரத்தின் முன் விழுந்து வணங்கிவிட்டு வரவேண்டும். விஷ்ணு ஆலயங்களில் வழிபாட்டிற்குப் பிறகு அமரக் கூடாது.

• இரவு நேரங்களில் பணம், உப்பு, எண்ணெய் கொடுக்கலாமா?

பணம், உப்பு, எண்ணெய் போன்றவை லட்சுமி அம்சங்களாகக் கருதப்படுகின்றது. இதை, மறந்தும் கூட இரவு நேரங்களில் கொடுக்கக் கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.05.2026