Thursday, November 10, 2016

பழைய 500, 1,000 ரூபாய் பறிமுதல் செய்ய உத்தரவு

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால், வழக்கம்போல் பறிமுதல் செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும், மாநிலம் முழு வதும் உள்ள, கட்சி நிர்வாகிகளை, மூன்று தொகுதிகளில் குவித்துள்ளனர். அவர்கள் ஓட்டல், திருமண மண்டபம், வீடு போன்றவற்றை வாடகைக்கு எடுத்து தங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில், அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக, புகார் எழுந்தது; அதன் அடிப்படையில், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.இம்முறை, அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.இந்நிலையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், நேற்று முன்தினம் இரவு முதல் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால், தேர்தலில் பணத்தை வாரி இறைக்க தயாராக இருந்த, கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். எனினும், டிச., 30 வரை, வங்கி அல்லது தபால் நிலையத்தில் மாற்றிக் கொள்ளலாம் என்பதால், கையிருப்பில் உள்ள, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை, வாக்காளர்களுக்கு வழங்கலாமா என, ஆலோசித்து வருகின்றனர்.எனவே, வாகன சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, பறிமுதல் செய்யாமல் இருக்கக் கூடாது; வழக்கம்போல், அவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024