Monday, June 1, 2015

160 கி.மீ. வேக ரயிலை விரைவில் தொடக்கிவைக்கிறார் மோடி

தில்லி - ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய "கதிமான்' விரைவு ரயில் சேவையை ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
தில்லி - ஆக்ரா இடையிலான 200 கி.மீ. தொலைவை, அந்த ரயில் 105 நிமிடங்களில் சென்றடையும் என கணக்கிடப்பட்டுள்ளது. கதிமான் விரைவு ரயிலுக்கு பலமுறை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்குப் பிறகு தொடக்கவிழா நடைபெற உள்ளது.
"தில்லி - ஆக்ரா இடையிலான ரயில் சேவையை ஜூன் 9-ஆம் தேதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது' என்று ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவசரகால நிறுத்தக் கருவி (பிரேக்), தானியங்கி தீ எச்சரிப்புக் கருவி உள்ளிட்ட வசதிகள் புதிய ரயிலில் இடம்பெற்றுள்ளன. இந்த ரயிலுக்கான பயணக் கட்டணம், சதாப்தி ரயில்களை ஒப்பிடுகையில் 25 சதவீதம் கூடுதலாக இருக்கும்.
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்களை சென்னை - ஹைதராபாத், கான்பூர் - தில்லி, கோவா - மும்பை உள்ளிட்ட 9 வழித்தடங்களில் விரைவில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024