Tuesday, June 2, 2015

தென் மேற்கு பருவமழை 5-ந்தேதி தொடங்க வாய்ப்பு தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு

சென்னை,

தென் மேற்கு பருவமழை 5-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

5-ந்தேதி தொடங்க வாய்ப்பு

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையால் தான் அதிக பயன் அடையும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு ஓரளவுக்குத்தான் பயன் அடையும்.

தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும். தமிழ்நாட்டை பொருத்தவரை கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில்தான் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசான அளவுக்குத்தான் மழை பெய்யும். இந்த நிலையில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை வருகிற 5-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

இன்று மழை பெய்யும்

தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும். இந்த மழை தினமும் பெய்து 5-ந்தேதி வரை நீடிக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

மழை அளவு

பேச்சிப்பாறை, அவினாசி தலா 7 செ.மீ., குளச்சல், வேடச்சந்தூர், குன்னூர் தலா 5 செ.மீ., மேட்டுப்பாளையம், திருப்புவனம், சத்யமங்கலம் தலா 4 செ.மீ., போச்சம்பள்ளி, அன்னூர், ஏற்காடு, பெருந்துறை, பவானிசாகர், பரூர், குமாரபாளையம், சேலம், பெரியகுளம் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024