Monday, January 22, 2018

பஸ் கட்டண உயர்வு எதிரொலி: ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது




பஸ் கட்டண உயர்வு காரணமாக, ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக முன்பதிவில்லா பெட்டியில் பயணிகள் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர்.

ஜனவரி 22, 2018, 04:30 AM
சென்னை,

பஸ் கட்டணத்தை தமிழக அரசு கடந்த 19-ந்தேதி இரவு அதிரடியாக உயர்த்தியது. கட்டண உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு பஸ் கட்டணம் வெகுவாகவே உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பஸ் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருந்த பயணிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  வெளியூர் செல்லும் பஸ்களிலும் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் கலக்கத்தில் உள்ளனர். ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, பயணிகள் அடுத்தகட்டமாக தேர்வு செய்வது பஸ் பயணங்களையே. ஆனால் கட்டண உயர்வு பஸ் பயணத்தையும் பயணிகள் மத்தியில் யோசிக்க வைத்துவிட்டது.

இதனால் பெரும்பாலான பயணிகள் ரெயில் பயணத்திற்கு மாறி விட்டனர். பாதுகாப்பான பயணம், கட்டணமும் குறைவு என்பதால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னையில் எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நேற்று தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் எவ்வளவு கூட்டம் இருக்குமோ? அதேபோன்ற பயணிகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், வைகை, அனந்தபுரி, நெல்லை, முத்துநகர், ராமேசுவரம், பொதிகை, மலைக்கோட்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் கூட்டம் மிகுதியாகவே இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடித்து விடும் நோக்கில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். இதேபோல் சென்னையில் மின்சார ரெயில்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், “பஸ் கட்டணம் எங்களை மலைக்க வைப்பதாக உள்ளது. உதாரணமாக 5 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கூடுதலாக செலவாகிறது. இது நடுத்தர குடும்பத்துக்கு பெரிய சிக்கல் தான்.

இதனால் நெரிசலில் சிக்கினாலும் பரவாயில்லை என்று ரெயிலில் பயணம் செய்யும் முடிவுக்கு வருகிறோம். ரெயில்களில் கூட்டம் மிகுதியாக உள்ளது. எனவே தேவையை உணர்ந்து சிறிது காலம் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டால் நன்றாக இருக்கும்”, என்றனர்.

பயணிகள் தேவையை உணர்ந்து, ரெயிலில் அமர இடம்பிடித்து காசு பார்க்கும் வேலையையும் சிலர் செய்தனர். முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் ஏற நீண்ட வரிசையில் சிலர் காத்திருந்து, பெட்டிகளில் இடம்பிடித்து, அந்த இடத்தை குறிப்பிட்ட தொகைக்கு பயணிகளுக்கு விட்டுக்கொடுத்தனர்.

அந்தவகையில் அவர்கள் நேற்று ஒரு இருக்கைக்கு ரூ.80 வரையில் பயணிகளிடம் வசூல் வேட்டை நடத்தினர். அதிலும் ஜன்னல் ஓரத்தில் உள்ள இருக்கை என்றால் ரூ.100-க்கு பேரம் பேசினர். அவசர கோலத்தில் வரும் பயணிகள் எப்படியாவது இடம் கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் கேட்ட தொகையை பேரம் பேசாமல் கொடுத்து செல்வதையும் பார்க்க முடிந்தது. இதனை தடுக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...